மு.க. ஸ்டாலின் சொல்லில் செயல்படும் எடப்பாடி அரசு... பட்டியலிட்டு குதூகலிக்கும் உதயநிதி..!
திமுக தலைவர் சொன்ன பிறகுதான் அரசு விழித்துக் கொண்டு செயல்படுகிறது என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனும் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வரும் திமுக இளைஞரணிச் செயலாளர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “திமுக ஆட்சி இருந்தபோது நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. ஆனால், தற்போதைய அதிமுக ஆட்சியில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோகிறது. அதைப் பற்றியெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அக்கறை இல்லை. மோடி தலைமையிலான ஆட்சியாளர்களுக்கு தமிழக மக்கள் மீது வெறுப்பு. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் அவர்களுக்குப் பாடம் புகட்டியதால், தமிழக மக்கள் விரோத திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் சார்ந்த பிரச்சினை குறித்து முதலில் குரல் கொடுக்கிறார். அதை உடனே சரி செய்யாமல் காலம் தாழ்த்துவதே எடப்பாடியின் வாடிக்கை. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். உடனே செய்தால் எதிர்க்கட்சித் தலைவருக்குப் பெயர் கிடைத்துவிடுமே என்ற அச்சத்தில் காலம் தாழ்த்தி, தற்போது தேர்தல் நேரத்தில் ரூ.2,500 வழங்கியுள்ளனர். அதேபோலத்தான் மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், எடப்பாடி அரசு காலம் தாழ்த்தி பிறகு தேர்வை ரத்து செய்தது.
அதேபோன்றுதான் தற்போதும் செய்துள்ளனர். விவசாயிகள் மீளாத் துயரில் இருக்கிறார்கள். அவர்களுடைய கடனை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் வலியுறுத்தி வந்தார். ஆனால், எடப்பாடி அரசு கடனை தள்ளுபடி செய்யாததால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். தற்போது அதிமுக அரசு, விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்துள்ளது. இதன்மூலம் திமுக தலைவர் சொன்ன பிறகுதான் அரசு விழித்துக் கொண்டு செயல்படுகிறது என்பது தெளிவாகிறதா?” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.