எம்எல்ஏக்களுக்கு கிலோ கணக்கில் தங்கம் கொடுத்துதான் எடப்பாடி முதல்வரானார்... திருநாவுக்கரசர் பகீர் புகார்..!
திமுக கூட்டணியோடு போட்டியிட அதிமுகவே திண்டாடி வரும் நிலையில், டிடிவி தினகரன், கமல்ஹாசன், சீமான் போன்றவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர். எம்.பி. செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எம்எல்ஏக்களைத் தூக்கிச் சென்று, பணம், கிலோ கணக்கில் தங்கம் கொடுத்துதான் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வரானார். ஆனால், தற்போது அப்படியெல்லாம் எதையும் செய்ய முடியாது. மக்களின் ஆதரவு இருந்தால்தான் முதல்வராக முடியும். பாஜகவோடு கூட்டணி வைத்ததால் நஷ்டம் என்பதை அதிமுகவில் சாதாரண தொண்டருக்கே தெரிந்திருக்கிறது. இது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியாமல் இருந்திருக்காது.
அதிமுகவினரின் மடியில் கனம் இருக்கிறது. தேர்தலை நோக்கிச் செல்லும் வழியில் பயமும் உள்ளது. எனவேதான் பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பலவீனமாகிவிட்டது. அதிலும், இரட்டைத் தலைமையுடன் அக்கட்சி செயல்படுவதும், சசிகலா, தினகரன் தலைமையில் மற்றொரு அணி செயல்படுவதும் அதிமுகவுக்கு மேலும் பலவீனம்தான்.
அதிமுக அரசு பாஜகவின் கீழ் கொத்தடிமை அரசாகவும், ஊழல் அரசாகவுமே இருந்து காலத்தைக் கழித்திருப்பது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியோடு போட்டியிட அதிமுகவே திண்டாடி வருகிறது எனில், முதல்வர் வேட்பாளர்களாகக் களமிறங்கி உள்ள தினகரன், சீமான், கமல்ஹாசன் போன்றவர்களால் எதுவும் செய்ய முடியாது” என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.