அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த விழிப்புணர்வுப் போராட்டம் சட்டமன்ற வளாகத்திலும் சோஷியல் மீடியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். அதிமுகவினர் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் நிகழ்வை "மாபெரும் காது குத்து விழா" என்று கலாய்த்து விமர்சித்துள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் காது குத்து விழா அழைப்பிதழ் பத்திரிகையை அச்சிட்டு கையில் எடுத்துக்கொண்டு சபைக்கு வந்துள்ளனர்.

தமிழக பட்ஜெட்டை பொறுத்தவரை, ஆண்டுதோறும் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும். அந்த வகையில், தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் ஆண்டு என்பதால், முழுமையான பட்ஜெட்டாக இல்லாமல், இடைக்கால பட்ஜெட்டாக இது தாக்கல் செய்யப்படுகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று காலை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள், ‘சட்டப்பேரவையில் காதுகுத்து விழா’என்ற விழிப்புணர்வு போராட்டம் நடத்தினர்.

கடந்த நான்கரை ஆண்டுகாலத்தில் பட்ஜெட் என்ற பெயரில் தமிழக மக்களுக்கு திமுக அரசு காது குத்தியுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் வெளியிட்ட காதுகுத்து விழா அழைப்பிதழில், ’’கடந்த நான்கரை ஆண்டுகளாக பட்ஜெட் எனும் பெயரில் தமிழ்நாட்டு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காதுகுத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.நாள் – பிப்ரவரி 17, 2026, இடம்: தமிழக சட்டமன்றம். நேரம்: காலை 10 மணி முதல். இவ்விழாவுக்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். மாண்புமிகு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் முன்னின்று காது குத்துவார்.

மேற்படி விழாவில் கூவம் சுத்திகரிப்புக்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்துக்கு நிதி, சிங்கார சென்னை திட்டத்துக்கு நிதி என்று விதம் விதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.பின்குறிப்பு: சொத்து வரி, வீட்டு, வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் ‘மொய்’வைக்கலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் இந்த விழிப்புணர்வுப் போராட்டம் சட்டமன்ற வளாகத்திலும் சோஷியல் மீடியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.