முன்னாள் முதல்வர் ஜெயல்லிதாவின் பிறந்தநாள் விழா நேற்று மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் கோலாகமாக கொண்டாடப்பட்டது.

அதிமுகவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா என 3 அணிகளாக பிளவுப்பட்டு செயல்பட்டு வருகிறது. 3 அணிகளும் யாருக்கும் விட்டு கொடுக்காமல் சரிசமமாகவே ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினர்.

இந்த விழாவில், ஏழைகளுக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, சைக்கிள், மூன்று சக்கர மோட்டார் பொருத்திய வாகனம், அன்னதானம் என்பது உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மதுரை கலெக்டர் அலுவலக கட்டிடத்தில், பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அங்கு தேவையில்லாத பொருட்களான ரப்பீஸ், உடைந்த நாற்காலி, மரச்சாமான், துடைப்பம் உள்ளிட்டவைகளை, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குப்பை தொட்டியில் போட்டு வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் கொடுப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் சென்றனர். அப்போது, அதிகாரிகள் சிலர் வேலையாக இருந்ததால், அவர்களை வெளியே காத்திருக்கும்படி கூறினர்.

இதனால், பொதுமக்கள் அந்த வளாகத்தில் உள்ள காலி இடங்களில் உட்கார்ந்தனர். அப்போது, அங்குள்ள ஒரு குப்பை தொட்டியில், முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் படத்தை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். உலகையே திரும்பி பார்க்க வைத்தவர், தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக பதவியேற்றவர் என புகழப்பட்ட ஜெயலலிதாவின் படம் குப்பை தொட்டியில் வீசுவதா என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.