duraimurugan troll edappadi palanisamy
ஒரு ஸ்டாலினையே அதிமுகவால் சமாளிக்க முடியவில்லை இன்னும் ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தால் அதிமுக வங்கக் கடலில்தான் போய் விழும் என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கான உரிமையை பெற்றுதந்தது அதிமுக அரசுதான் என்று குறிப்பிட்டார். மேலும், ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுக அரசை அசைக்க முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன் . இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு திமுக துரோகம் செய்துவிட்டது என்று திரும்பத் திரும்ப சொன்னால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருப்பது அவர் வகிக்கும் முதல்வர் பதவிக்கு துளியும் அழகல்ல.
பொதுப்பணித் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் காவிரி சம்பந்தப்பட்ட கோப்புகளை படிக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுப்பணித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்புகளை படிக்க வேண்டும்.
அதுவும் இல்லை என்றால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், நானும் காவிரி பிரச்சினையில் திமுகவின் சாதனைகள் பற்றி சட்டப்பேரவையில் பேசியதையாவது காது கொடுத்து கேட்டிருக்க வேண்டும். இதில் எதையுமே செய்யாமல் முதல்வர் இப்படி பேசிக் கொண்டிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானம்” என்று விமர்சித்துள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் முதல் பேச்சுவார்த்தையை துவக்கியது, நடுவர் மன்றத்திற்கு முதலில் கோரிக்கை வைத்தது, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது, நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத் தீர்ப்பு பெற நடுவர் மன்றத்திற்கு உச்ச நீதிமன்றத்தில் அதிகாரம் பெற்றது, இடைக்காலத் தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்டு அதன்படி காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது, அதிமுக அரசு முடக்கி வைத்திருந்த காவிரி வழக்கு இறுதி விசாரணையை முடித்து இறுதி தீர்ப்பு பெற்றது அனைத்துமே திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது செய்த சாதனைகள் என்று குறிப்பிட்டுள்ள துரைமுருகன், “ காவிரி இறுதி தீர்ப்பு ஏன் அரசிதழில் உடனடியாக வெளியிடப்படவில்லை என்பதற்கு அதிமுக அரசின் சார்பில் சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே விளக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களும் நடுவர் மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் இறுதி தீர்ப்பின் மீது விளக்கம் கேட்டு வழக்குத் தொடுத்திருப்பதால் அரசிதழில் வெளியிட முடியவில்லை என்பது விளக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
1971ல் பேச்சுவார்த்தைக்கு வழிவிட்டு காவிரி வழக்கு மீண்டும் தாக்கல் செய்யப்படும் அதிகாரத்துடன் அதுவும் அனைத்துக் கட்சிகளின் கருத்தினை கேட்டு திரும்பப் பெறப்பட்டது என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் வழக்குக்காகக் கருணாநிதி வாபஸ் பெற்று விட்டார் என்று முதல்வர் பேசுவது வேதனையளிப்பதாக கூறியுள்ள அவர், “2013ல் அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி இறுதி தீர்ப்பை மத்திய அரசுடன் கைகோர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு நாடகங்களை இரு அரசுகளும் கூட்டாக நடத்தித் திருத்திவிட்டு, நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரில் 14.75 டிஎம்சி தண்ணீரையும் இழந்துவிட்டு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தன்னாட்சி அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் உரிமையையும் பறிகொடுத்துவிட்டு தன் பதவியை மட்டும் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று கூச்சமின்றி இருக்கும் முதல்வர் திமுகவைப் பார்த்து காவிரி பிரச்சினையில் சுட்டு விரல் காட்டுவதற்கு எவ்வித தகுதியோ தார்மீக உரிமையோ இல்லை” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், “காவிரி வரைவு திட்டம் உச்ச நீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டு, ஜூன் மாதம் 1 ஆம் தேதிக்குள் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டும், இன்று வரை அமைக்காமல் நாகப்பட்டினத்தில் நான் தான் காவிரிப் பிரச்சினையில் சாதித்து விட்டேன் என்று நர்த்தனம் ஆடுவதற்கு முதல்வருக்கு கொஞ்சமாவது தயக்கம் வேண்டாமா?
இறுதியில் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுக அரசை அசைக்க முடியாது என திருவாய் மலர்ந்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒரு ஸ்டாலினை சட்டப்பேரவையில் பேச விடுவதற்கே அஞ்சி நடுங்கி நிற்கும் முதல்வர் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால் வங்காள விரிகுடா கடலில்தான் அதிமுக அரசு கிடக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதிமுக அரசை அசைத்துப் பார்க்க ஆயிரம் ஸ்டாலின்கள் தேவையில்லை. ஏதோ விபத்தில் முதல்வராகிவிட்ட பழனிசாமி வீராப்பு பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல காவிரி பிரச்சினையில் சாதித்தது திமுகவா அல்லது அதிமுகவா என்று விவாதம் நடத்த விரும்பினால் நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். ஒரே மேடையில் காவிரி பற்றி விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாரா என்பதைக் கேட்க விரும்புகிறேன்” என்றும் சவால் விடுத்துள்ளார்.
