சட்டசபையில் அதிமுக கொண்டுவந்த தீர்மானமே தவறு என்று உண்ணாவிரதத்தில் பங்கேற்ற துரைமுருகன் கூறியுள்ளார்.

சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அமளி ஏற்பட்டதில் திமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

இதில் தங்கள் எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டதாகவும் , தனக்கும் காயம் ஏற்பட்டது என்றும், தனது சட்டை கிழிக்கப்பட்டது என்று கிழிந்த சட்டையுடன் ஸ்டாலின் கவர்னரை சந்தித்தார்.

பின்னர் கடற்கரையில் அறப்போராட்டம் நடத்தினார். பின்னர் இதற்காக உண்ணவிரதம் தமிழகம் முழுதும் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன் படி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப்போராட்டம் நடக்கிறது.

இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் , முஸ்லீம் லீக் பங்கேற்கிறது.
காஞ்சிபுரத்தில் திமுக உண்ணாவிரதத்தில் பங்கேற்ற துரை முருகன் அதிமுகவை விமர்சித்து பேட்டி அளித்தார்.அப்போடு அவர் கூறியதாவது.

சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை நடைபெற்றதை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார் அந்த தீர்மானமே தப்பு. இந்த அமைச்சரவை மீது நம்பிக்கை வைத்ததை தெரிவிக்கிறேன் என்கிறார். நம்பிக்கை கோரும் தீர்மானமாக வைக்கவில்லை. 

அவ்வாறு அவர் கொண்டுவந்த தீர்மானமே தவறு. அதிமுக எம்.எல்.ஏக்கள் கவனத்தை எங்கும் செல்லாமல் பொதுமக்கள் எண்ணங்களை கூட அறிந்துகொள்ளாத வகையில் செயல்பட்டனர்.

சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை சபாநாயகர் நிராகரித்துவிட்டார் என்று தெரிவித்தார்.