கருணாநிதிக்காக சட்டப் பேரவையில் கண்ணீர்விட்ட துரைமுருகன்…. நெஞ்சு வலியால் அப்பல்லோவில் அனுமதி…
நேற்று தமிழக சட்டப் பேரவையில் கருணாநிதி மீதான இரங்கல் தீர்மானத்தின் போது அவருக்காக கண்ணீர்விட்டு கதறி அழுத திமுக பொருளாளார் துரைமுருகனுக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய திமுக பொருளாளரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான துரை முருகன், தன்னை கருணாநிதி தனது சொந்த பிள்ளைபோல வளர்த்தார் என்றும், ஸ்டாலினுக்கு கொடுக்கத உரிமைகளை தனக்கு கொடுத்தார் என்றும் உணர்ச்சிவசப்பட்டு பேசி கண்ணீர் வடித்தார்.
ஒரு கட்டத்தில் துரைமுருகன் கதறி அழுதார். அருகில் அமர்ந்திருந்த ஸ்டாலின் அவரைத் தேற்றினார். தொடர்ந்து துரைமுருகன் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருந்தார்.
இந்நிலையில் இன்று காலை துரை முருகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.