ஜெ.தீபா வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரி!! போலீஸை கண்டு தப்பியோட்டம்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வீட்டிலிருந்து போலி வருமான வரித்துறை அதிகாரி தப்பியோடினார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
சென்னை தி.நகரில் உள்ள தீபா வசித்து வருகிறார். மருத்துவ பரிசோதனைக்காக தீபா வெளியூர் சென்றுள்ள நிலையில், வீட்டில் அவரது கணவர் மாதவன் மட்டுமே இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 5 மணியளவில் தீபாவின் வீட்டுக்கு சென்ற ஒரு நபர், தன்னை வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறியுள்ளார். அவர் தனியாக வந்திருந்ததால், சந்தேகமடைந்த மாதவன், தனிநபராக வந்திருப்பது கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, மற்ற அதிகாரிகள் 10 மணிக்கு மேல் வருவார்கள் எனவும் தன்னை மட்டும் முதலில் அனுப்பிவைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் தான் சோதனை மேற்கொள்வர். எனவே தங்களுக்கு தகவல் இல்லாமல் சோதனை என்ற தகவலை அறிந்த போலீசார், தீபாவின் வீட்டிற்கு சென்று அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரித்துக் கொண்டிருந்தபோதே அந்த நபர் தப்பியோடிவிட்டார். தப்பியோடிய போலி வருமான வரித்துறை அதிகாரியை போலீசார் விரட்டி சென்றுள்ளனர். சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றியும் அந்த நபர் யார் என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.