பதவியை காப்பாற்றவே படாத பாடுபடுகிறார் எடப்பாடி... - கொளுத்தி போடும் டிடிவி...!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ளவே அக்கறைக்காட்டி வருவதாகவும் மக்களை பற்றி அவர் கவலைப்படவில்லை எனவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு நோயால் பல பேர் உயிரிழந்தும் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்ட எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழக அரசே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தமிழகத்தில் தற்போது டெங்கு அரசு நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பிக்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், இந்த ஆட்சியில் தான் டெங்கு காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டும், இறந்தும் போயுள்ளனர் என்றும் இந்த அரசு டெங்கு காய்ச்சல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் தற்போது டெங்கு ஆட்சி தான் நடைபெறுவதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியது உண்மை என்றும் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து தற்போது செய்தியாளர்களை சந்தித்த டிடிவி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ளவே அக்கறைக்காட்டி வருவதாகவும் மக்களை பற்றி அவர் கவலைப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
மேலும் டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் டெங்கு காய்ச்சலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.