தமிழக அரசு சார்பில் மகாசிவராத்திரி விழா நடத்துவது திராவிட மாடல் அல்ல என்றும், இது இந்துத்துவா மாடல் என்றும்  திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, ‘ இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி காலத்தில், பொற்காலம் என போற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு, திருக்குடமுழுக்கு, அறநிலையத்துறை சார்பில் பள்ளிகள், கல்லூரிகள், திருக்கோயில் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு என பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சிவராத்திரியை முன்னிட்டு, சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் வகையிலல் அறநிலையத்துறை சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 2-ஆம் தேதி காலை 6 மணி வரை 12 மணி நேர மாகா சிவராத்திரி விழா 100-க்கும் மேற்பட்ட ஆன்மீக கலைஞர்களைக் கொண்டு, சிறப்பாக நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில், ஆன்மீகம் தொடர்பான மங்கள இசை, சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பக்தி பாடல்கள், கிராமிய இசை நடைபெறவுள்ளன. ஆன்மீகம் தொடர்பான 10 விற்பனையகங்கள் அமைக்கபடவுள்ளது. அதில், பழநி பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்களின் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. முக்கிய திருக்கோயில்களின் தலபுராணம், தலவரலாறு, திருக்கோயில்களின் வழிகாட்டி நூல்கள் போன்ற அரிய வகை நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சிக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை மாடவீதிகளில் நிறுத்தி கொள்ளலாம். நிகழ்ச்சி நடைபெறும் நேரங்களில் திருக்கோயில் சார்பாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சி அரங்கில் 3000 நபர்கள் அமர்வதற்கு இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சிவாலயங்களில் மகா சிவராத்திரி அன்று ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றதோ அதை விட செம்மையாகவும், மகா சிவராத்திரி ஏன் நடத்தப்படுகின்றது என பக்தர்களுக்கு தெரிந்துக் கொள்ளும் வகையில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடத்தவும் திருக்கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகா சிவராத்திரி அன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்’ என்று கூறினார்.

இது தொடர்பாக விடுதலை ராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது. மயிலாப்பூர் கோயிலுக்கு சொந்தமான ஒரு மண்டபத்தில் மகா சிவராத்திரி விழாவை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு. 

மகா சிவராத்திரியன்று கண் விழிக்க வேண்டும் என்கிற மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி சுமார் 40,000 பேரைக் கூட்டி மார்ச் 1ஆம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆன்மீக பிரச்சாரம், ஆன்மீக பட்டிமன்றம், ஆன்மீக இசை என இரவு முழுவதும் ஆன்மீகத்தை மக்களிடம் பரப்பப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றிலேயே முதல்முறையாக திமுக அரசுதான் இந்த பணியை செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

திராவிட மாடல் அல்ல அறநிலையத்துறையின் பணி என்பது கோயில்களை பராமரிப்பது, கோயில்களில் நடக்கும் சடங்குகள், கும்பாபிஷேகங்களை முறையாக கண்காணித்து அதற்கான ஏற்பாடுகளை செய்துத் தருவது, கோயில் நிலங்களை மீட்டெடுப்பது போன்றவைதான். இதனை மிகவும் சிறப்பாக அமைச்சர் சேகர்பாபு செய்து வருகிறார். ஆனால், மக்களைத் திரட்டி ஆன்மீகம் என்ற பெயரில் மதப்பிரச்சாரம் செய்வது அறநிலையத்துறையின் பணியல்ல. அது திராவிட மாடலும் அல்ல. 

குழி தோண்டி புதைப்பது உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியை, 'திராவிட மாடலுக்கு கிடைத்த வெற்றி' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகிறார். டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு, 'தேர்தல் வெற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய அளவில் மிகப்பெரிய தலைவராக உயர்த்திவிட்டது, அரசியலில் அவர் மிகப்பெரிய பங்கை ஆற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது' என தலையங்கம் தீட்டியுள்ளது. 

மக்களிடம் சென்று கல்வி, மருத்துவத்தை வழங்குவது, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதுதான் திராவிட மாடல். ஆனால், மக்களிடம் மதப்பிரச்சாரம் செய்வதுதான் திராவிட மாடல் என சேகர்பாபு போன்ற அமைச்சர்கள் செய்வது தமிழ்நாடு அரசு கட்டிக்காத்து வளர்த்து வரும் அடிப்படை கொள்கையை குழிதோண்டி புதைக்கும் ஆபத்தான போக்கு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மயிலாப்பூர் ஆன்மீக நகரமா? இதுவரை எந்த அறநிலையத் துறையும் செய்யாத வேலையை இப்போது ஏன் செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. 

உத்தர பிரதேசத்தில் ராமன் பிறந்ததாக சொல்லப்படும் அயோத்தியை கோயில் நகரமாக, புனித நகரமாக இந்துத்துவ பாஜக அரசு அறிவிக்கிறது. ஆனால், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு, மயிலாப்பூரை ஆன்மீக நகரமாக மாற்றப்போகிறேன் என்கிறார். அயோத்தியிலாவது ராமன் பிறந்தான் என்று கூறுகிறார்கள்? மயிலாப்பூரில் யார் பிறந்தார்? அதனை ஆன்மீக நகரமாக மாற்றுவதற்கு. சென்னையிலுள்ள மற்ற தொகுதிகளைக் காட்டிலும் மயிலாப்பூர் மட்டும் ஏன் ஆன்மீக நகரமாக சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிகிறது.

வண்ணாரப் பேட்டையோ, ராயபுரமோ ஆன்மீக நகரமாக முடியாதா? திமுக ஆட்சிக்கு எதிரானது திராவிட மாடல் ஆட்சியை குழிதோண்டி புதைப்பதற்கெனவே சபதம் எடுத்துக்கொண்டவர்கள் வாழும் பகுதிதான் ஆன்மீக பகுதி, அவர்களை மகிழ்விப்பதுதான் எனது கடமை என ஒரு சட்டமன்ற உறுப்பினர் புறப்படுகிறார். 

அவருக்கு துணையாக மயிலாப்பூரை ஆன்மீக நகரமாக மாற்றுவதன் ஒரு பகுதியாக மக்களை திரட்டி மதப்பிரச்சாரம் செய்யப்போகிறேன் என்று அறிவித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு. இது திராவிடன் மாடல் ஆட்சியை குழிதோண்டி புதைக்கும் செயலாகும். அண்ணாவும், கலைஞரும் கட்டிக்காத்த கொள்கையில் ஓட்டை போடுகிற மிகப்பெரிய ஆபத்தாகும். உண்மைகள் கசக்கும் என்று சொன்னாலும் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமை. 

தமிழ்நாடு முதலமைச்சர் கட்டாயம் இதில் தலையிட வேண்டும். திமுகவில் லட்சக்கணக்கான சிந்தனையாளர்கள், திராவிட இயக்க கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் இன்னமும் அமைச்சர்களாக, பொறுப்பாளர்களாக, உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பதை அமைச்சர் சேகர்பாபு புரிந்துகொள்ள வேண்டும் என பணிவோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.