திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

சட்டப்பேரவையில் கடந்த 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி, எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள். இதுபற்றி கவர்னரிடம் புகார் அளித்துள்ளோம். கவர்னர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா பிறந்த நாளை, அரசு விழாவாக கொண்டாடினர். உச்சநீதிமன்றம், குற்றவாளி என உறுதி செய்து தீர்ப்பளித்த ஜெயலலிதாவின் பெயரில் நலத்திட்டங்களும், அரசு விழாவும் நடத்தப்பட்டுள்ளது. இது சட்டத்துக்கு முரணான சம்பவம்.

புதிய அறவிப்புகளுக்கு ஜெயலலிதா பெயரை சூட்டுவது, உள்ளிட்ட சம்பவங்களும் நடந்து வருகிறது.அரசு கட்டிடம், தலைமை செயலகத்திலும் ஜெயலலிதாவின் படம் உள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்திலும், உள்ளாட்சி சார்ந்த நிறுவனங்கள். குறிப்பாக அம்மா உணவகம், அமைச்சர்கள் அலுவலகம் உள்பட அனைத்து பகுதியிலும் அவரது படம் வைக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு அரசு அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கும் தயாராக இருக்கிறோம். உரிய நடவடிக் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சட்டமன்றத்தில் நடந்த சம்பவம் குறித்து குடியரசு தலைவரிடம் புகார் கொடுத்துள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

நீட் தேர்வு குறித்தும், ஜனாதிபதியிடம் கூறியிருக்கிறேன். நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, முன்முடிவு செய்து மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அவரிடம் போய் சேரவில்லை என்ற தகவல் மட்டுமே கிடைத்துள்ளது.

பேரவையில் நடந்த சம்பவம் குறித்து வழக்கு தொடர்ந்துள்ளோம். அங்கு நடந்த காட்சிகள் அந்த அறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. அதனை கேட்டுள்ளோம். அதை எடிட் செய்யாமல் தரவேண்டும். இத்தனை நாள் ஆகிறது என்றபோது, எங்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. முறையாக அவர்கள் கொடுக்க வேண்டும்.

சட்டமன்ற காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்ப்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.