குருவிக்கார சமூகமும், குறவர் இன்னமும் வேறு என்பதை தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என என்றும், இவ்விரு சமூகத்தையும் அடையாளப்படுத்துவதில் குழப்பம் இருக்கிறது என்றும் தேமுதிக  பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார். 

குருவிக்கார சமூகமும், குறவர் இன்னமும் வேறு என்பதை தெரியப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என என்றும், இவ்விரு சமூகத்தையும் அடையாளப்படுத்துவதில் குழப்பம் இருக்கிறது என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

குருவிக்காரர் சமூகமும் குறவர் இனமும் வேறு என்பதை உலகறிய செய்வதுடன் அவர்களுக்கான நலத் திட்டங்களையும் தமிழக அரசு வழங்கிட வேண்டும். தமிழ் கடவுளான முருகனின் மனைவியாக அறியப்படும் குறவர் மகள் வள்ளியின் வம்சாவழிகளாக குறவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உள்ளனர். மராட்டிய பிராந்தியத்தில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து ஊசிமணி, பாசிமணி விற்கும் குருவிக்காரர் மக்களைக் குறவர் என்று அடையாளப்படுத்துவது முறையல்ல. பழந்தமிழ் வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான குறிஞ்சி நிலத்து குறவர் சமுதாயத்தின் தலை முறைகள், அவர்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் நிலை உருவாகியுள்ளது.

குருவிக்கார சமூகத்தை பட்டியல் இனத்தில் இணைப்பதை தேமுதிக வரவேற்கிறது. அதேசமயம் குருவிக்காரர் மக்களைக் குறவர் என்று அடையாளப்படுத்துவதன் காரணமாக குறவர் சமுதாயத்தினர் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சலுகைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே குறவர் சமுதாயத்திற்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும் அவர்களின் இன அழிப்பு செய்வதை தடுக்கும் பொருட்டும், குருவிக்கார சமூகத்தையும் குறவர் இனத்தையும் வேறுபடுத்தி உலகறிய செய்வதுடன் அவர்களுக்கான நல திட்டங்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நரிக்குறவர் மக்களின் குடியிருப்புக்கு சென்று அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அவர்கள் வீட்டில் உணவருந்திவிட்டு வந்தார். இது தமிழகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாமல்லபுரத்தை ஒட்டியுள்ள பூஞ்சேரி கிராமப்பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்கள் குடியிருப்புகளுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். இந்நிலையில்தான் விஜயகாந்த் குருவிக்காரர்களை குறவர்கள் என அடையாளப் படுத்துவது தவறு என வலியுறுத்தி இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.