இந்தியாவின் மொழிதான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமானால், அந்தத் தகுதி நாட்டின் பழமையான மொழியான தமிழுக்குதான் உண்டு. ஆனாலும், மொழித் திணிப்பில் தமிழகத்துக்கு விருப்பமில்லை என்பதால்தான் எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழியாக்கக் கோருகிறோம். 


மாநிலங்களுக்கு இடையே தொடர்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியிருப்பதன் பொருள், மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படும் என்பதுதான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு

இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியைக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கூறியிருந்தார். மேலும் இந்திதான் நாட்டின் அலுவல் மொழியாக ஏற்கும் காலம் வந்துவிட்டது என்றும் அமித்ஷா தெரிவித்திருந்தார். அமித்ஷாவின் இந்தக் கருத்துக்கு இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் அமித்ஷாவின் கருத்துக்கு எதிப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமித்ஷாவால் அதிர்ச்சி

அதில், “மாநிலங்களுக்கு இடையிலான தொடர்பு மொழியாக இந்திய மொழியான இந்திதான் இருக்க வேண்டும்; ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி வரவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் பொருள், மாநிலங்கள் மீது இந்தி திணிக்கப்படும் என்பதுதான். இந்தி இந்தியாவில் சற்று அதிகமாக பேசப்படும் மொழி. அதற்காகவே அதை மற்ற மாநிலங்கள் மீது திணிக்கக் கூடாது என்பதுதான் கிட்டத்தட்ட 85 ஆண்டுகளாக இந்தி பேசாத மாநிலங்கள் எழுப்பி வரும் குரல் ஆகும். அதை ஏற்றுதான் ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடர நேரு அனுமதித்தார் என்பது வரலாறு.

22 மொழிகளும் அலுவல் மொழிதான்

இந்தியாவின் மொழிதான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டுமானால், அந்தத் தகுதி நாட்டின் பழமையான மொழியான தமிழுக்குதான் உண்டு. ஆனாலும், மொழித் திணிப்பில் தமிழகத்துக்கு விருப்பமில்லை என்பதால்தான் எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழியாக்கக் கோருகிறோம். இந்தியாவில் ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் தொடர வேண்டும். தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். பிற மொழிகளை கற்கும் விஷயத்தில் அனைத்து மாநில மக்களின் விருப்பங்களும், உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும்” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.