பெண்கள் மீது அவ்வளவு அக்கறையா.? 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற தயாரா.? பிரதமர் மோடிக்கு டி.ராஜா கேள்வி!
பெண்களின் சமத்துவம், பெண்களின் உரிமையின் பக்கம் நிற்பவர் போல் தமிழகத்தில் பிரதமர் மோடி பாசாங்கு செய்யக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி. ராஜா விமர்சித்தார்.
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தலில் அதிமுக-பாஜக தேர்தலில் படுதோல்வி அடையும். தமிழகத்தில் பாஜக கூட்டணி அடையும் படுதோல்வி, இந்திய அளவில் மத்திய ஆட்சியின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக அமையும். அதனால்தான் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் போன்றவர்கள் தமிழகத்துக்கு படையெடுத்து வருகிறார்கள். அவர்களிடம் நம்பிக்கை என்பதற்கு பதிலாக விரக்தி தலைதூக்கியுள்ளது.
திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் மகத்தான வெற்றியை அளிக்க போகிறார்கள். அதிமுகவின் அதிகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதிமுக அரசு மாநில உரிமைகளையும் நலன்களையும் காக்க தவறிவிட்டது. மத்திய அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட அரசாக தமிழக அரசு உள்ளது. அதிமுக அரசு இனியும் தொடரவே கூடாது என்று மக்கள் கோபத்தில் உள்ளனர்.
திமுக-காங்கிரஸ் கூட்டணி, பெண்களை அவமதிக்கிறது என்று கூறும் பிரதமர் மோடியின் பேச்சை ஏற்க முடியாது. அது நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படி பேசியதைக் கண்டிக்கிறோம். பெண்களுக்கான சமூகநீதி, பெண் விடுதலைக்காகப் போராடிய மாநிலம் தமிழகம். மோடிக்கு உண்மையில் பெண்கள் குறித்து அக்கறை இருக்குமென்றால் 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் எம்.பி.க்கள் உள்ளனர். பெண்களுக்கு ஆதரவான இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற மோடி தயாரா? இதையெல்லாம் ஏன் மோடி பேச மறுக்கிறார். பெண்கள் சமத்துவத்துக்காக, பெண்கள் உரிமைக்காக நிற்பவர் போல் தமிழகத்தில் மோடி பாசாங்கு செய்யக் கூடாது” என்று டி. ராஜா விமர்சித்தார்.