பால்தாக்கரே எப்படி  தென்னிந்தியர்கள் வட இந்தியர்கள் என வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பினாரோ அதேபோல சீமானும் இப்போது வட இந்தியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார் என்றும் பலர் விமர்சிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் வடமாநிலத்தவரால் அதிகரித்து வரும் சட்டம் – ஒழுங்கு சீரழிவினைத் தடுக்க, உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நாம் தழிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாது, கைகட்டி வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கை பல இலட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வட மாநிலத்தவர் ஆதிக்கம் தற்போது தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதோடு, பொருளாதாரமும் பெருமளவு பறிபோகிறது. மேலும், அவ்வாறு வேலைக்கு வரும் வட மாநிலத்தவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிட சான்று உள்ளிட்டவை பெற்று நிரந்தரமாக தமிழ்நாட்டில் குடியேறும் நிகழ்வும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து ஏதிலிகளாக மாறும் நிலமாக தமிழ்நாடு மெல்ல மெல்ல மாறிவருகிறது.

அதுமட்டுமின்றி, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுவதும், கும்பல் மனப்பான்மையில் பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் மேற்கு மாவட்டங்களில் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழும் கொடுஞ்சூழலே நிலவுகிறது. நாளுக்குநாள் அதிகரித்த அத்தகைய குற்றச்செயல்களைத் தடுக்கத் தவறிய தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கே, தற்போது காவல் ஆய்வாளர் உட்பட ஏழு காவல்துறையினரையே கண்மூடித்தனமாகத் தாக்கி கட்டுக்கடங்காத உச்சகட்ட வன்முறையில் ஈடுபடும் அளவிற்குச் சட்டம் - ஒழுங்கு சீர்குலைய முக்கியக் காரணமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு இதற்கு மேலாவது விழித்துக்கொண்டு, தமிழ்நாட்டிற்குள் பணிக்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கை, பணி புரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச் சீட்டு (ILP - Inner Line Permit) முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.
என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அதாவது சீமானின் இந்த பேச்சு நாம் தமிழர் கட்சி தொடங்கியது முதலே ஒலித்து வருகிறது. 1960களில் அதாவது மும்பை மராட்டியர்களுக்கே என பால் தாக்கரே பேசியதைப் போல நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து வடமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை எதிர்த்து பேசி வருகிறார். பால்தாக்கரே எப்படி தென்னிந்தியர்கள் வட இந்தியர்கள் என வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பினாரோ அதேபோல சீமானும் இப்போது வட இந்தியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார் என்றும் பலர் விமர்சிக்கின்றனர். தற்போது மராட்டியத்தில் பால்தாக்ரே வழியில் ராஜ்தாக்கரே, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக பேசி வரும் நிலையில், அதேபோன்ற குரல் சீமானிடம் இருந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.