ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த விடமாட்டோம்..! கங்கனம் கட்டி செயல்படும் திமுக..!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி, ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு 11 மாதங்களாக காலியாக உள்ளது.
கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. அதிமுக அம்மா அணி சார்பில் தினகரன், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் அந்த தேர்தலில் போட்டியிட்டனர்.
ஆனால் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது. பணப்பட்டுவாடா செய்யப்பட்ட வழக்கில் முதல்வர் பழனிசாமி உட்பட பல அமைச்சர்களின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
அப்போது நடந்த வருமான வரி சோதனையில் சிக்கிய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே வினவியிருந்தார்.
இதற்கிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், கடந்த முறை பணப்பட்டுவாடா செய்த வழக்கில் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்காத வரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தக்கூடாது என ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ், தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.