காவியும் காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறல்... ராகுல் மீதான தாக்குதலுக்கு செம காண்டில் உதயநிதி..!
உத்தரப்பிரதேசத்தில் காவியும் காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறலை ஜனநாயக சக்திகள் கண்டிக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உ.பி. பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியுடன் ஹத்ராஸ் சென்றார். அப்போது இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ராகுல் காந்தி மீது தாக்குல் நடத்தப்பட்டுள்ளதால் உத்தரப்பிரதேசத்தில் பதற்றம் நிலவுகிறது. ராகுல் மீது நடந்த தாக்குதலுக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
இந்நிலையில் ராகுல் காந்தி மீது நடந்த தாக்குதலுக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “உ.பி.யில் பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை உ.பி காவல்துறை தடுத்து தள்ளிவிட்டது மிகப்பெரிய அராஜகம். காவியும் காக்கியும் இணைந்து நடத்தும் அத்துமீறலை ஜனநாயக சக்திகள் கண்டிக்க வேண்டும்.” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.