கருணாநிதி வீட்டிலிருந்து பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் கைதாகி ரிலீஸ்... முதல் நாளே சலசலப்பு..!
தமிழகத் தேர்தல் பிரசாரத்தை திமுக இளைஞரணி செயலாளர் இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளே கைது செய்யப்பட்டார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி திமுக அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்களை காணொலி காட்சி மூலம் நடத்திவருகிறது. இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 100 நாள் தேர்தல் பிரசாரத்தை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் தொடங்கினார். ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற முழக்கத்தோடு இந்த பிரசாரத்தை உதயநிதி தொடங்கினார்.
கட்சித் தொண்டர்கள் புடை சூழ ஏராளமான வாகனங்களுடன் பிரசாரம் தொடங்கிய உடனே உதயநிதி ஸ்டாலினை நாகப்பட்டினம் போலீஸார் கைது செய்தனர். கொரோனா விதிமுறைகளை மீறியதாகக் கூறி போலீஸார் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து உதயநிதி ஸ்டாலினை போலீஸார் விடுவித்தனர். பிரசாரம் தொடங்கிய முதல் நாளே உதயநிதி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.