தமிழகத்தில் யார் ஜெயிப்பாங்க ? அதிமுக கூட்டணியை பதற வைத்த உளவுத்துறை !!
தமிழகத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என மத்திய உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையால் ஆளும் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் அதிமக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிகட்சி போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதே போல் திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ், இடது சாரிகள், விசிக, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 40 மக்களவைத் தொகுதிகளுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும், மத்திய , மாநில உளவுத் துறை அமைப்புகளை, அந்தந்த அரசுகள், தேர்தல் வெற்றி தொடர்பான அறிக்கைகளை தயார் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றன.
இது தொடர்பாக மத்திய உளவுத் துறை அறிவித்துள்ள அறிக்கையில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிக தொகுதிகளில் வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில், 25 முதல் 30 தொகுதிகளுக்கும், மேலாக திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் திமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் ஓரளவுக்கு இந்தமுறை ஆதரவு இருந்தாலும், மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதால், எதிர்க்கட்சிகளுக்கு செல்லக்கூடிய வாக்குகள் சிதறும்எனவும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
அதிமுக கூட்டணியை பொறுத்தளவில் அதிகபட்சம் 10 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்க முடியாது என்று உளவுத்துறை அறிக்கை கூறுவதால் பாஜக மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.