தேர்தலில் திமுக தோற்கணும்... பங்குனி உத்திரம் அன்று கந்த சஷ்டி பாராயணம் செய்யுங்க... இதக தலைவர் கோரிக்கை!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட அனைவரும் வழிபாடு நடத்த வேண்டும் என்று இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக - அதிமுக கூட்டணி இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கூட்டணியிலும் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் வேண்டுகோள் ஒன்றை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “வரும் 28ஆம் தேதி பங்குனி உத்திரம். அன்று மாலை 6 மணிக்கு இந்து தமிழர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வீட்டில் அமர்ந்து வழிபாடு நடத்த வேண்டும். இந்து தெய்வங்களை இழிவுப்படுத்தியோர், ஆண்டாள் தாயை, திருப்பதி பெருமாளை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை கேவலமாகப் பேசியவர்கள், தாலி அறுப்பு நிகழ்ச்சி நடத்தியவர்கள், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாதவர்கள்; இந்து கோயில்களை உடைத்து, புத்தர் கோயில்களாக மாற்றுவோம் எனச் சொன்னவர்கள் தேர்தலில் தோற்க வேண்டும்.
கறுப்பர் கூட்டம், திக போன்ற இயக்கங்களை வளர்க்கும் திமுக தலைமையிலான கூட்டணி, தோல்வி அடைய வேண்டும். இதற்காக வீட்டில் வேல் அல்லது முருகன் படம் வைத்து குடும்பத்துடன் விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும். ‘முருகா... முருகா...’ என முருக நாம ஜெபம் செய்ய வேண்டும். நம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஊரில் விளக்கேற்றி செய்யும் கூட்டு பிரார்த்தனை, இந்து விரோதிகளுக்கு இந்தத் தேர்தலில் தக்க தண்டனையை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.