திமுகவுக்கு இன்னும் 27 அமாவாசைகள்தான் இருக்கு..?? கெடு வைத்து பேசிய எடப்பாடி.. பயங்கர பின்னணி.
ஒவ்வொரு முறையும் தேர்தலால் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகளால் கொள்கை முடக்கம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் வளர்ச்சி தடைபடுகிறது. இதேபோல் எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை பல்வேறு காரணங்கள் கூறி எதிர்க்கின்றன. ஒரே நாடு ஒரே தேரதல், தேசிய கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று அதாவது மோடிக்கு அது சாதகமாக இருக்கும் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திருச்சியில் ஒரு அணு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் நடக்கப் போகிறது என்று அதிரடியாக பேசியுள்ளார் ஓ. பன்னீர்செல்வம். எப்போதும் அமைதியாக பேசக்கூடிய சுபாவம் கொண்ட ஓ. பன்னீர்செல்வம் திடீரென படு வேகமாக பந்து வீசி இருக்கிறார். ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த பேச்சை எளிதாக கடந்து செல்ல முடியாது. ஓ.பன்னீர்செல்வம் கூறியது போல நடக்குமா? அதற்காக சாத்தியக்கூறுகள் உள்ளதா? என அலச வேண்டியிருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருச்சி மாவட்ட அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய போதுதான் இந்த தகவலை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும், நாம் மீண்டும் ஆட்சியில் அமர இந்த தேர்தல் அச்சாரமாக இருக்கும், அதற்கு சாதகமான சூழல் இப்போது உருவாகி இருக்கிறது. அனைவரும் ஓரணியாக இருந்து அதிமுக 100% வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தேர்தலின்போது நீட் தேர்வு ரத்து என அறிவித்தார் ஸ்டாலின், ஆனால் அது போன்று எதுவும் நடக்கவில்லை, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது, அந்த நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டமன்ற தேர்தல் வரும் என அவர் பேசினார்.
எந்த அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுகிறார் என்ற கேள்வி நம்மில் எழக்கூடும், இதற்கான பதிலை எடப்பாடி பழனிச்சாமி மற்றொரு கூட்டத்தில் வழங்கியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமல்படுத்தப்படும், எனவே லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தப்படும். திமுக ஆட்சிக்கு இன்னும் 27 அமாவாசைகள் தான் உள்ளது என கரூர் கூட்டத்தில் பேசியுள்ள எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். மேலும் கடந்த 9 மாதத்தில் ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் என்ன செய்தார் சைக்கிள் ஓட்டினார், டீ குடிக்கிறார், அதை டிவி பத்திரிகைகளில் விளம்பரப்படுத்திக் கொள்கிறார். ஸ்டாலின் நம்பர் ஒன் முதல்வர் என்கிறார்கள், அவர் பொய் பேசுவதில்தான் நம்பர் ஒன் முதல்வராக இருக்கிறார். இந்த இரு தலைவர்களின் உரைகளில் இருந்து 2024 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும் என்றும், லோக்சபா தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்த்து நடைபெறும் என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது பிரதமர் மோடியின் கனவு திட்டம், ஆனால் இது மோடியின் கண்டுபிடிப்பு திட்டம் அல்ல. இது ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிற ஒன்றுதான். 1952, 1962, 1967 ஆகிய ஆண்டுகளில் ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றன. 1983 ஆம் ஆண்டே தேர்தல் ஆணையம் அனைத்து வகையான தேரதலையும் ஒரே சமயத்தில் நடத்த வேண்டும் என வலியுறுத்தியது. 1989 நீதிபதி ஜீவன் பேட்டி தலைமையிலான சட்ட ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவர வேண்டும் என பரிந்துரைத்தது. 2015ஆம் ஆண்டு டிசம்பரில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என பரிந்துரைத்தது. நாடு முழுக்க இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த பரிந்துரை செய்யப்பட்டது. இரண்டு கட்டங்களாக நடத்தச் சொல்வதற்கான நியாயமான காரணங்கள் உண்டு. 2024 ஆம் ஆண்டு லோக்சபாவுக்கும், சட்டமன்ற தேர்தலுக்கும் சேர்த்து தேர்தல் நடப்பதாக இருந்தால் அந்த தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன் அதாவது 2023 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கட்சிகள் வந்த ஓராண்டுக்குள்ளாகவே தனது ஆட்சி களைக்கப்படுவதை விரும்பாது.
அப்படி கலைப்பது நியாயமும் இல்லை, இந்த பிரச்சினைக்கு சுமுகமாக தீர்வு காண டாக்டர் சுதர்சன நாச்சியப்பன் ஒரு யோசனையை முன் வைத்தார், லோக்சபா தேர்தல் நடக்கும்போது அதை ஒட்டி ஆட்சிக்காலம் முடிவடையும் மாநிலங்களுக்கும் சேர்த்து முதல் கட்டமாக தேர்தல் நடத்தலாம், மீதம் உள்ள மாநிலங்களுக்கு சேர்த்து மூன்றாண்டுகள் கழித்து இரண்டாவது கட்டமாக தேர்தல் நடத்துவது, இதன் மூலம் எல்லா மாநிலங்களும் ஆட்சிக்காலம் முடிகிறபோது தேர்தலை சந்திக்கும். எனவே ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை தேர்தல் நடத்துவதை நடைமுறை சாத்தியமே என்று தனது நிலைக்குழு அறிக்கையில் சுதர்சன நாச்சியப்பன் பரிந்துரை செய்தார். இவர் காங்கிரஸ் எம்பி ஆவர், மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகத் துறை இணை அமைச்சராக இருந்தவர்தான் சுதர்சன நாச்சியப்பன், இதை பரிந்துரைத்தவர் சுதர்சன நாச்சியப்பன் தானே தவிர மோடி அல்ல.
அஸ்ஸாம் தைபரிஷத்தும், அதிமுகவும் இந்த திட்டத்தை ஏற்றன. அப்போது ஜெயலலிதா உயிருடன் இருந்தார். 2017 ல் நிதிஷ்குமார் இதனை வரவேற்றார். இது நடைமுறை சாத்தியமற்றது என காங்கிரஸ் கூறியது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தேசியவாத காங்கிரசும் இதற்கு சாத்தியமே இல்லை என்று கூறின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடைமுறைச் சிக்கல்கள் நிறைந்தது என்றது, திரிணாமுல் காங்கிரஸ் இது ஜனநாயக விரோதமானது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது என்றது. 2017 ஏப்ரலில் நிதி ஆயோக் ஒரு அறிக்கை வெளியிட்டது 2024 லோக்சபா தேர்தலின்போது சட்டப்பேரவைத் தேர்தலை யும் சேர்த்து நடத்த வலியுறுத்தியது, 2018 ஏப்ரல் 17 அன்று நீதிபதி டி.எஸ் சவுகான் தலைமையில் சட்ட ஆணையம் வெளியிட்ட வரைவு வெள்ளை அறிக்கையில் ஒரே நாடு ஒரே தேர்தல் வலியுறுத்தப்பட்டுள்ளது, இதனடிப்படையில்தான் 2024 ஆம் ஆண்டு ஒரே தேர்தல் நடைபெறும் என்ற வியூகம் வலுத்து வருகிறது.
எப்படியாயினும் இது சாதாரண விஷயம் அல்ல, உடனடியாக நடந்து விடக்கூடிய விஷயமும் அல்ல, பெரும் விவாதத்திற்குப் பின் கருத்து ஒற்றுமைக்கு பின் தேவையான சட்ட திருத்தங்களுடன் நடைபெற வேண்டிய ஒன்று. அரசியலமைப்பு சட்டத்தில் முதலில் திருத்தம் செய்யப்பட வேண்டும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சட்டத்திருத்தங்கள் ஏராளம் செய்யப்படவேண்டும். நாடாளுமன்ற சட்டமன்ற நெறிமுறைகளில் மாற்றம் தேவைப்படும். ஒரு சில மாநிலங்களில் சட்டசபை காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். சில மாநிலங்களில் அதை அதிகரிக்க வேண்டியிருக்கும். இவற்றை சாத்தியப்படுத்துவதற்கான சட்டத்திருத்தங்கள் தேவைப்படும்.
இதேபோல் வாக்குப்பதிவு எந்திரங்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இப்போது என்ன இருக்கின்றனவோ அது போல இரண்டு மடங்கு தேவைப்படும். ஒரே நேரத்தில் சட்டசபைக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற வேண்டுமென்றால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இருத்தல் வேண்டும். எனவே இப்போது இருப்பது போல இரண்டு மடங்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படும். ஆக இரண்டு மடங்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொள்முதல் செய்ய வேண்டியிருக்கும், அதே போல் பல மடங்கு கூடுதல் போலீஸ் படைகள் தேவைப்படும். தேர்தல் பணியாளர்கள் தேவைப்படுவர், நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏன் தொடங்கியது என்பதையும் நாம் ஆராய வேண்டி இருக்கிறது. எல்லா நேரங்களிலும் நாட்டில் ஏதேனும் ஒரு பகுதியில் தொடர்ந்து தேர்தல் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் வீண் செலவு ஏற்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் ஐந்து ஆண்டு காலமாக தேர்தலைப் பற்றியே கவலைப்பட வேண்டியதாக இருக்கிறது. ஆட்சியில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது.
ஒவ்வொரு முறையும் தேர்தலால் கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிமுறைகளால் கொள்கை முடக்கம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் வளர்ச்சி தடைபடுகிறது. இதேபோல் எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை பல்வேறு காரணங்கள் கூறி எதிர்க்கின்றன. ஒரே நாடு ஒரே தேரதல், தேசிய கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று அதாவது மோடிக்கு அது சாதகமாக இருக்கும் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் வாக்காளர்கள் குழம்பிவிடுவார்கள். மாநில அரசுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு திடீரென கவிழ்ந்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்வியையும் முன் வைக்கிறார்கள். இடைத்தேர்தல்களை எப்படி அணுகுவீர்கள் என்ற கேள்வியையும் முன் வைக்கின்றனர். இது போன்ற பல கேள்விகளை எதிர் கட்சிகள் முன்வைக்கின்றன. இவ்வளவு பெரிய நடைமுறையும், அனைத்து அம்சங்களையும், அனைத்து கோணங்களிலும், அலசி ஆராய்ந்து விட்டு தான் செயல்படுத்துவார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. திடீரென திமுக வுக்கு எதிராக ஓபிஎஸ் இபிஎஸ்சும் அரசியல் யார்க்கர் போட்டுள்ளனர். இது அடுத்தகட்ட விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.