எல்லாவற்றுக்குமே இதுவரை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி காரணம் என்று நினைத்திருந்தோம். இப்போது மாநில தேர்தல் ஆணையத்திடம் கேட்ட கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில் சொல்கிறார் என்றால், அந்த பழனிசாமிக்காக இந்த பழனிசாமிதான் மாநில தேர்தல் ஆணையத்தை சட்டவிரோதமாக செயல்பட வைத்துள்ளார் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது.
முதல்வர் தன் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு உள்ளாட்சித் தேர்தல் ஒன்றும் அதிமுகவின் உள்கட்சித் தேர்தலும் இல்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவதற்கு காரணமான ‘கூவத்தூர்’ தேர்தலும் அல்ல என்று திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி வெளியிட்ட அறிக்கை:

“திமுக தேர்தலைக் கண்டு பயப்படுகிறது” என்றும் “மக்களைக் குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் எங்கள் கழகத் தலைவர்” என்று கூறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். திமுக என்ன கேட்கிறது? “உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக முறைப்படி, சட்ட நெறிமுறைகளின் படி நடத்துங்கள்” என்று மட்டுமே கோரிக்கை வைத்துள்ளது. தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் திமுகவின் நோக்கம் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

