"உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது - அன்பில் மகேஷ். திமுகவை சேர்ந்தவர்கள் மட்டுமே தமிழர்கள் என்று நீங்கள் நினைத்து பேசியுள்ளீர்கள்"

திமுக ஆட்சியிலேயே இருக்கக்கூடாது என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது என்று தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தமிழக பாஜக கிண்டலடித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த உடனே, உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அவர் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. என்றாலும், அமைச்சர்கள் எல்லோரும் உதயநிதிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கும் அதே மரியாதையை அளித்துவருகிறார்கள். எப்படியும் உதயநிதி முதல்வர் ஸ்டாலின் அமைச்சராக்கிவிடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இந்நிலையில், உதயநிதி பிறந்த நாளில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “234 தொகுதிகளும் பயன்படும் வகையில் உதயநிதி ஸ்டாலின் மாறவேண்டும். நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும், குறிப்பாக சேப்பாக்கம் தொகுதி மக்கள் நினைப்பது, எங்களுக்கு மட்டும் இவ்வளவு செய்யும்போது, அவர் உயரிய பதவிக்கு சென்றால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பயனளிக்கும் என்ற எண்ணம் உள்ளது. உதயநிதி அடுத்தகட்டமாக அமைச்சராக வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்றும் அமைச்சர் அன்பில் மகேஷ், உதயநிதி அமைச்சராவது பற்றி பேசியிருக்கிறார். இதுதொடர்பாக அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது அமைச்சர்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார்” என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் அன்பில் மகேஷின் இந்தக் கருத்தை தமிழக பாஜக கிண்டலடித்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், “உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது - அன்பில் மகேஷ். திமுகவை சேர்ந்தவர்கள் மட்டுமே தமிழர்கள் என்று நீங்கள் நினைத்து பேசியுள்ளீர்கள் என்ற அடிப்படையில், திமுக ஆட்சியிலேயே இருக்கக்கூடாது என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது என்று மற்றவர்கள் கூறுகிறார்கள்.” என்று நாராயணன் திருப்பதி கிண்டல் செய்துள்ளார்.