தமிழகத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஐந்து வகை குடும்,ப அட்டைகளுக்கே அத்தியாவசியப் பொருட்களைக் கொடுக்க முடியாமல் திணறும் அ.தி.மு.க அரசு, புதிதாக “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” என்ற திட்டத்தில் சேர்ந்து தமிழ்நாட்டில் நீண்ட காலமாக உள்ள பொது விநியோகத் திட்டத்தையே இழுத்து மூடத் தயாராகி விட்டது. 

மாநில உரிமையை விட்டுக் கொடுத்து, மாநிலத்தில் உள்ள பொது விநியோகத் திட்டத்திற்கும் ஆபத்தை உருவாக்கும் வகையில் “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தில் தமிழகம் நிச்சயமாக இணையக்கூடாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:


ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் சேருவதற்குத் தயார் என டெல்லியில் நடைபெற்ற மத்திய உணவு அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில், தமிழக உணவு அமைச்சர் காமராஜ் சம்மதம் தெரிவித்துவிட்டு வந்திருப்பதும், “இந்தத் திட்டத்தில் தமிழகம் நிச்சயம் இணையும்” என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்திருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
ரேசன் கடைக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கச் செல்லும் மக்களுக்கு “இன்று போய் நாளை வா” என்று கூறி, ஏழை எளியவர்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டுறவுத்துறையிலும், உணவுத்துறையிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஊழலை கட்டுப்படுத்த முடியாமல், அடையாளம் பிரித்துப் பார்க்க முடியாமல், அதனுடன் சங்கமித்து விட்ட இரு அமைச்சர்கள் மத்திய பா.ஜ.க அரசு எடுக்கும் முடிவிற்கு எல்லாம் “கைகட்டி” “வாய் பொத்தி” ஆதரவுக் கரம் நீட்டி வருவது வேதனைக்குரியது.
தமிழகத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஐந்து வகை குடும்,ப அட்டைகளுக்கே அத்தியாவசியப் பொருட்களைக் கொடுக்க முடியாமல் திணறும் அ.தி.மு.க அரசு, புதிதாக “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” என்ற திட்டத்தில் சேர்ந்து தமிழ்நாட்டில் நீண்ட காலமாக உள்ள பொது விநியோகத் திட்டத்தையே இழுத்து மூடத் தயாராகி விட்டது.
தமிழகத்திற்கு உரிய மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைக் கூடப் பெற வக்கில்லாத அ.தி.மு.க அரசு, இப்போது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்குக் கிடைக்கவேண்டிய ரேசன் பொருட்களையும் “ஒரே நாடு ஒரே அட்டை” திட்டத்தில், மக்களுடைய இசைவைப் பெறாமல், இணைவதன் மூலம் தாரைவார்க்க முடிவு செய்திருக்கிறது.
குறிப்பாக இதுகுறித்து சட்டமன்றத்தில் தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியபோது, “தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும்” என்று கூறிவிட்டு, இப்போது “வருகிற டிசம்பர் மாதத்திற்குள் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் இணையும்” என்று உணவுத்துறை அமைச்சர் கூறியிருப்பது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது.