DMK-Pmk:முதல்வரை பயங்கரமா புகழ்ந்த பாமக எம்எல்ஏக்கள்.. எடப்பாடி கோட்டையில் வெடி வைத்த ஸ்டாலின்..
இந்த ஆட்சியில் துண்டு சீட்டில் மனு அளித்தாலும் அதனை நிறைவேற்றும் நிலை உள்ளது. சேலத்தில் கடந்த மாதம் அமைச்சரிடம் துண்டு சீட்டில் கொடுத்த மனுவிற்கு விடையாக முதியோர் உதவி தொகை கிடைத்துள்ளது என்று அவர் முதலமைச்சரையும் திமுக ஆட்சியையும் பாராட்டினார்.
கட்சிப் பாகுபாடு இல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என பாமக மேட்டூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சதாசிவமும், துண்டு சீட்டில் மனு அளித்தாலும் அதை நிறைவேற்றும் ஆட்சிதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி என்று பாமக எம்ஏல்ஏ அருளும் புகழ்ந்து பாராட்டி பேசியுள்ளனர். திமுகவையும், முதல்வர் ஸ்டாலினையும் தொடர்ந்து அதிமுக பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் முதல்வரை பாராட்டி இருப்பது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
திராவிட கட்சிகளை தமிழகத்திலிருந்து விரட்டாமல் ஓயமாட்டோம்.. என கங்கணம் கட்டி பேசிவந்த பாஜக, பாமக இறுதியில் அதிமுக என்ற திராவிட கட்சியுடன் கூட்டணி அமைத்து கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளன. பின்னர் திமுக என்ற தீய சக்தியை ஒழிப்பது தான் எங்கள் லட்சியம் என்று கூறிவந்த அக்கட்சியினர் நடந்து முடிந்த அனைத்து தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்துள்ளன. சாதிக் கட்சியான பாமக வுடன் கூட்டணி அமைத்ததுதான் தங்களின் தோல்விக்கு காரணம் என அதிமுகவும், கூட்டணியில் பாஜக இடம்பெற்றதுதான் தோல்விக்கு காரணம் என பாமகவும் மாறி மாறி பேசத் தொடங்கியது கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த கையோடு கிராம்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தனித்துப் போட்டி என கூட்டணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது பாமக. ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டும் இந்த முடிவு என்றும், அதே நேரத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தொடர்கிறோம் என்றும் பாமக தனது முடிவை மாற்றி அறிவித்தது.
ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் தான் எதிர்பார்த்த அளவுக்கு பாமக வெற்றி முடியாமல் போனது. இந்நிலையில் தங்கள் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தொடர் தோல்வி காரணமாக அக் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் மேடை தோறும் தனது கட்சி நிர்வாகிகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருவதை காணமுடிகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அதிமுக பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால் அக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவோ தொடர்ந்து தமிழக அரசை விமர்சிப்பது தவிர்த்து வருகிறது. எப்படியாவது திமுக கூட்டணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதற்கு காரணம் என்றும், அதனால்தான் பாமக அடக்கி வாசிப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இதன் வெளிப்பாடாகதான் சமீபத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினை மனம் திறந்து பாராட்டினார் என்றும் கூறுகின்றனர். நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்தோம், அவர்கள் 25 இடங்களில் 2 இடங்கள் மட்டுமே கொடுத்தார்கள், அங்கும் போட்டி வேட்பாளர்களை நிறுத்தினார்கள். அதனால்தான் நாம் தற்போது தனித்து போட்டியிடுகிறோம், அரை நூற்றாண்டு காலம் உழைத்ததால்தான் ஸ்டாலின் முதல்வர் கனவை நனவாக்கினார். அதுபோல பாவமாகவும் தனது கனவை நனவாக்க பாடுபடவேண்டும், மாநில சுயாட்சி கோரிக்கையை அண்ணா முன்வைத்தார் அது நியாயமானதுதான். அதனால்தான் பாமக அந்த கோரிக்கையை வரவேற்கிறது, மாநிலப் பட்டியலில் கல்வி இருந்திருந்தால் இன்று நீட் தேர்வு வந்திருக்காது, இன்று வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு திமுக அதிமுக என இரண்டு கட்சிகளும் ஆதரவு அளிக்கிறது என அவர் பேசினார். எப்போதும் திமுகவை மிக கடுமையாக விமர்ச்சிக்க கூடிய அன்புமணி திமுகவையும் அதன் சித்தாந்தங்களையும் பாராட்டியது பேசுபொருளானது.
அதேநேரத்தில் பாஜக முதல்வர் ஸ்டாலினையும், அவரது குடும்பத்தாரையும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அரை நூற்றாண்டு காலம் உழைத்து தான் ஸ்டாலின் முதல்வர் கனவை நனவாக்கினார் என அன்புமணி பேசியது கூட்டணிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அன்புமணியை முதல்வராக்குவோம் என்ற முழக்கத்துடன் பாமக செயல்பட்டு வருவதையும் காணமுடிகிறது. இது ஒரு வகையில் அதன் கூட்டணி கட்சிகளான பாஜக மற்றும் அதிமுகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் திமுகவுக்கு எதிராக பாமக எந்த எதிர்விளைவுகளையும் ஆற்றாமல் மௌனம் காத்து வருவதுடன், திமுக அரசையும் முதல்வரையும் பாராட்டி வருவதால், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணிக்கு பாமக கணக்கு போடுகிறது என்றே இதை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் சேலம் வருகை தந்துள்ளார். அதில் சேலத்திற்கும் தனக்கும் உள்ள தொடர்பை அவர் நெகிழ்ச்சியுற பேசியுள்ளார். அதே நேரத்தில் அதில் பாமகவை சேர்ந்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் பாமக மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை மனம் திறந்து பாராட்டியுள்ளனர். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாமக எல்எல்ஏ அருள், மாற்றான் தோட்டது மல்லிகைக்கும் மனம் இருக்கும் என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். இந்த ஆட்சியில் துண்டு சீட்டில் மனு அளித்தாலும் அதனை நிறைவேற்றும் நிலை உள்ளது. சேலத்தில் கடந்த மாதம் அமைச்சரிடம் துண்டு சீட்டில் கொடுத்த மனுவிற்கு விடையாக முதியோர் உதவி தொகை கிடைத்துள்ளது என்று அவர் முதலமைச்சரையும் திமுக ஆட்சியையும் பாராட்டினார்.
இதேபோல மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கூறுகையில், கடந்த காலங்களில் உள்ள முதல்வர்களை விட மிக எளிமையான முதல்வராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றும் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை மிக சிறப்பாக நிறைவேற்றி சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று உள்ளதாகவும், அனைத்து தொகுதிக்கும், எந்த கட்சிக்கும் பாகுபாடின்றியும் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்று புகழாரம் சூட்டினர். பாமக சட்ட மன்ற உறுப்பினர்களின் இந்த பேச்சு அரசியல் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சேலம் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் வலுவான தொகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த இடத்தில் முதலமைச்சர் பாமக எம்எல்ஏக்கள் பாராட்டியிருப்பது அதிமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்றே சொல்லலாம்.