திமுகவினரின் அராஜகம் தொடர்கிறதா? அப்போ பிரியாணி... இப்போ பஜ்ஜியா? செம கடுப்பில் ஸ்டாலின்!
வடை - பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியரைத் தாக்கியும் ஓட்டல் உரிமையாளரை தரக்குறைவாக பேசியும் திமுகவின் முன்னாள் வட்ட செயலாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வடை - பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியரைத் தாக்கியும் ஓட்டல் உரிமையாளரை தரக்குறைவாக பேசியும் திமுகவின் முன்னாள் வட்ட செயலாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊழியரைத் தாக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் தங்க பாண்டியன் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த உணவகத்துக்கு திமுகவைச் சேர்ந்த கரிமேடு ராஜி, சிலம்பரசன், யுவராஜ், முருகன் ஆகியோர் சென்று வடை மற்றும் பஜ்ஜி சாப்பிட்டுள்ளனர். அப்போது, அவர்களிடம் கடை ஊழியர்கள் வடை, பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பணம் தர மறுத்து விட்டனர். மேலும், கடை ஊழியர்களை மிரட்டும் வகையில், நாங்கள் யார் தெரியுமா? என்று பேசியும் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், எங்களை அவர்கள் மிரட்டிவிட்டு சென்றதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இரவு 10 மணியளவில் திமுகவின் முன்னாள் வட்ட செயலாளரும், வழக்கறிஞருமான ரஜினி என்பவர் பத்துக்கும் மேற்பட்டோருடன் அந்த உணவகத்துக்கு வந்துள்ளார். அப்போது, கடை உரிமையாளர் தங்க பாண்டியனை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஊழியர் முருகனை அவர்கள் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, தங்கபாண்டியன் அப்பகுதியில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வழக்கறிஞர் ரஜினியின் ஆட்கள் கடை ஊழியரை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை ஒன்றில் திமுகவினர் தாக்குதல் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், தற்போது ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியரை திமுகவினர் மிரட்டி சென்ற சம்பவம் நடந்துள்ளது.