அப்பாவியை அடித்து கொன்ற வழக்கு.. திமுக எம்.பி.ரமேஷ்க்கு ஜாமீன் கிடைக்குமா? நாளை வெளியாகிறது தீர்ப்பு..!
கடலூர் திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி, சந்தேக மரணம் என பதிவுசெய்த வழக்கை, கொலை வழக்காக மாற்றியது.
முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் ஜாமீன் கோரிய திமுக எம்.பி.ரமேஷ் மனு மீது நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
கடலூர் திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி, சந்தேக மரணம் என பதிவுசெய்த வழக்கை, கொலை வழக்காக மாற்றினர். இந்த வழக்கில் திமுகவை சேர்ந்த கடலூர் எம்.பி. ரமேஷ் அக்டோபர் 11ம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் கோரி கடலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஜாமீன் கோரி எம்.பி. ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடலூர் கிளைச்சிறையில் அடைத்து எம்.பி.க்கு சலுகை காட்டப்பட்டுள்ளதாக பலியான கோவிந்தராசுவின் மகன் தரப்பில் குற்றம் சாட்டுவது தவறு.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், போலீஸ் காவலுக்கு அழைத்து செல்லும் போது காயம் ஏற்பட்டதால் முதலுதவி அளித்து அழைத்து சென்றதாகவும், ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்த பின் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிசிடிவி பதிவுகள் குறித்த தடயவியல் ஆய்வு அறிக்கைக்கு காத்திருப்பதாகவும், எந்த தலையீடும் இல்லாமல் புலன் விசாரணை நியாயமாக நடைபெறுவதாகவும் வாதிடப்பட்டது.
கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணை அதிகாரி நியாயமாக விசாரிக்கவில்லை. பூனைக்கும் காவல், பாலுக்கும் காவல் என்ற அடிப்படையில் விசாரணை நடப்பதால், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும். விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். புலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கும் வகையில் சிபிசிஐடி யில் உள்ள வேறொரு அதிகாரியை பரிந்துரைக்க நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் சுந்தரராஜன் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து ஜாமீன் மனு மீதான வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.