தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதையொட்டி தலைவர்களின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19இல் ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதைத் தொடர்ந்து மேலும், வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூர், கும்பகோணம், சிதம்பரம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அந்த புகாரில், ‘மாநில தேர்தல் ஆணையத்தின் செய்தி அறிக்கையின்படி, 11.2.2022 வரை எந்த கட்சியும் சாலையில் பொதுமக்களை கூட்டி கூட்டம் நடத்துவதற்கும், பேரணி நடத்துவதற்கும், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த சுற்றறிக்கை வெளிப்படைத் தன்மையோடு தேர்தல் ஆணையத்தின் சமூகவலைத்தள பக்கத்திலும் பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.

ஆனால், இதை ஆட்சி அதிகாரம் தன் கையில் இருக்கிறது என்ற காரணத்தினால் உதயநிதி ஸ்டாலின் 9.2.2022 அன்று திருச்சி மற்றும் கரூரிலும் 10.2.2022 அன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலும் அப்பட்டமான தேர்தல் விதிமீறலாக நூற்றுக்கணக்கான மக்களை நெடுஞ்சாலையில் கூட்டி பெருந்தொற்று சட்டத்தை மீறுகின்ற வகையில் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அந்த இடத்தில் குழுமியிருந்தார்கள். 

அவர்கள் மத்தியில் தேர்தல் பரப்புரையை உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டார். இந்த தேர்தல் பரப்புரையானது சட்டத்திற்கு உட்பட்டு அல்லது முறையான அனுமதியைப் பெற்று நடந்திருக்க வாய்ப்பில்லை மாறாக அனுமதி பெற்று இருப்பார்களேயானால் அவ்வாறு அனுமதி பெற்றவர்கள் மீதும், அந்த அனுமதியை வழங்கிய வழங்கிய திருச்சி, கரூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் இந்த சட்ட விதி மீறலுக்கு பொறுப்பாவார்கள். எனவே ஆட்சி அதிகாரம் தங்களின் கையில் இருக்கிறது என்ற காரணத்தினால் பெருந்தொற்றில் மக்கள் அவதிப்பட கூடிய இந்த சூழ்நிலையில் அப்பட்டமான தேர்தல் விதி மீறல் ஆகும். 

அப்பட்டமான பெருந்தொற்று சட்ட விதி மீறல் ஆகவும் இது பார்க்கப்படுகிறது. இவ்வாறு தேர்தல் விதி மீறிய பெருந்தொற்று சட்டத்தை பின்பற்றாமல் அந்த விதியை மீறிய உதயநிதி ஸ்டாலின் மீது உடனடியாக தேர்தல் விதியின் படியும், இந்திய தண்டனை சட்டத்தின் படியும் உரிய வழக்கு தொடுக்க வேண்டும். அந்த நெடுஞ்சாலை கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய திருச்சி, கரூர், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மீதும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மீதும் அதே சட்டங்களின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.