"சுவாதி கொல்லப்பட்டு ஓராண்டாகியும் சிசிடிவிக்கள் பொருத்தாதது ஏன்?" - சட்டசபையில் திமுக உறுப்பினர் கேள்வி!!
சென்னை நுங்கம்பாக்கத்தில் மென்பொறியாளர் சுவாதி பொதுமக்கள் முன்னிலையிலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவத்தைத் தொடர்ந்து ரயில்நிலையங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி. எனப்படும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுவாதி படுகொலை செய்யப்பட்டு நாளையுடன் ஒரு வருடம் நிறைவடையும் நி்லையில் அறிவிக்கப்பட்ட படி நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் எந்த கண்காணிப்புக் கேமராக்களும் இதுவரை பொருத்தப்படவில்லை.
பெண்களின் பாதுகாப்பு மீது அரசுக்கு அக்கறை இல்லை என்று சமூக வலைத்தளங்களில் இவ்விவகாரம் பெரிதாகப் பேசபட்டு வரும் நிலையில், திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, தமிழக சட்டமன்றத்தில் நேற்று இப்பிரச்சனையை எழுப்பினார்.
இது குறித்துப் பேசிய அவர், “ஸ்வாதி கொலை செய்யப்பட்டு நாளையுடன் ஒரு ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் அவர் படுகொலை செய்யப்பட்ட சென்னை நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் இதுவரை சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
ஐ.டி.நிறுவனங்களில் பணிபுரியம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. பேருந்துநிலையம், ரயில்நிலையம், உள்ளிட்ட பெண்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் உடனடியாக சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும்.” இவ்வாறு மானியக் கோரிக்கை மீதான விவாவதத்தில் டி.ஆர்.பி.ராஜா பேசினார்.