அனல் பறக்கும் தேர்தல் களம்... கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்...!
சற்று நேரத்திற்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கான முதற்படியாக வேட்புமனு தாக்கல் இரு தினங்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் நாளே போடி தொகுதியில் போட்டியிட தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு அடுத்து இரு தினங்கள் விடுமுறை என்பதால் முதல் நாளில் மட்டும் 70 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், நட்சத்திர வேட்பாளர்கள் என பலரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் 3வது முறையாக களமிறங்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பகல் 1 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். அதன்பின்னர் அப்பகுதியை ஒட்டியுள்ள நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட உள்ளார்.
சற்று நேரத்திற்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். 9வது முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 3வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அயனாவரத்தில் உள்ள 6வது மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்தார். ஏற்கனவே 2011, 2016ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு ஸ்டாலின் வென்றுள்ளார்.