dmk is the reason for sufferings of fishermen
கச்சத்தீவு மீட்கப்பட்டால்தான் தமிழக மீனவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார், மீனவர்கள் இன்று இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் திமுகதான் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
கவிஞர் கண்ணதாசனின் 91 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் ஜெயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், திமுக கச்சத் தீவை தாரை வார்த்துக் கொடுத்ததால்தான் இன்று தமிழக மீனவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தபின் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் எல்லை சுருங்கி விட்டதாகவும், இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இப்பிரச்சனை குறித்து இந்திய - இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நடுக்கடலில் எல்லைக் கோடு தெரியாது என்பதால், ஒரு வேளை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினாலும் இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்குவதோ அல்லது கைது செய்வதோ கூடாது எனவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
