கச்சத்தீவு மற்றும் நீட்தேர்வு பிரச்சினைகளில் திமுக அரசியல் நாடகம் நடத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார். 

கச்சத்தீவு மற்றும் நீட்தேர்வு பிரச்சினைகளில் திமுக அரசியல் நாடகம் நடத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார். பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்ததோடு சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். மேலும் முடிவுற்ற திட்டப்பணிகளை நாட்டிற்கு அற்பணித்தார். அந்த வகையில், பிரதமர் மோடி மதுரை - போடி இடையிலான அகலப்பாதை ரெயில் திட்டத்தையும் நேற்று மாலை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். இதற்காக மதுரை ரெயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதுரை - தேனி ரயில் தொடக்க நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை - தேனி ரெயில் கனவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக தென் மாவட்ட மக்கள் சார்பாக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போன்று திமுக ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது. கருணாநிதி ஆட்சியில் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. தற்போது அவருடைய மகன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கச்சத்தீவை மீட்க கேட்கிறார். நீட் தேர்வு குறித்து முதல்வர் மேடையில் பேசியது விளம்பரம் தேடுவதற்காகவே.

ஏனென்றால் திமுக ஆதரவுடன் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தான் 2010 ஆம் ஆண்டு நீட் தேர்வு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியது. அப்போதைய திமுக மத்திய அமைச்சர் காந்திசெல்வன் கையெழுத்திட்டார். இப்போது நீட்தேர்வு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. எனவே கச்சத்தீவு மற்றும் நீட்தேர்வு பிரச்சினைகளில் தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாக திமுக அரசியல் நாடகம் நடத்தி வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு காரணமே திமுக தான். வளர்ந்த மாநிலங்களிடம் இருந்து அதிக வரி வருவாய் பெற்றாலும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கிறது. கூடுதல் நிதி ஒதுக்கீடு வேண்டுமென முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போத ஆணித்தனமாக கூறினார்கள். ஒரு வருடத்தில் திமுக அறிவித்த திட்டங்கள் பல தோல்வியடைந்து விட்டது என்று தெரிவித்தார்.