முன்பு தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்து மக்கள் குடியேறினர். தற்போது புதுச்சேரியில் இருந்து மக்கள் தப்பித்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் தேர்தல் நேரத்தில் அறிவித்த ஒன்றைக்கூட பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றவில்லை.என்று திமுக மாநில அமைப்பாளர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.

என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவரும் சிவாவின் பிறந்தநாளையொட்டியும் மே தினத்தையொட்டியும் லாஸ்பேட்டையில் மருத்துவ முகாம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில், “புதுச்சேரியை ஆளும் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கடன்களை தள்ளுபடி செய்வோம் என்றார்கள். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்குவோம் என்றார்கள். புதுச்சேரியில் மூடப்பட்டு கிடக்கும் மில்களை திறந்து இயக்குவோம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கினார்கள்.

கடந்த தேர்தலில் தோல்வி

ஆனால், தேர்தல் நேரத்தில் அறிவித்த ஒன்றைக்கூட பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றவில்லை. புதுச்சேரிக்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவும் ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. எந்தத் திட்டமும் நடைபெறவில்லை. கடந்த முறை புதுச்சேரியில் ஆட்சியில் இருந்தபோது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் அந்த ஆட்சிக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் சபாநாயகர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தேர்தலில் தோற்றுபோயினர். தற்போது ஆட்சிக்கு வந்து பிறகு புதுச்சேரி மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? வேலைவாய்ப்பு தந்தார்களா, தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளார்களா?

திமுக ஆட்சி வர வேண்டும்

புதுச்சேரியில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம், நல்ல குடிநீரும் கிடைக்கும் சூழல் இருந்தது. இதனால் முன்பு தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்து மக்கள் குடியேறினர். தற்போது புதுச்சேரியில் இருந்து மக்கள் தப்பித்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் திமுக ஆட்சி அமைய வேண்டும். திமுக ஒரு மிகப் பெரிய ஜனநாயக கட்சி ஆகும். எனவே, யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். நமது தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாக்கம் இருக்கக்கூடிய ஆட்சி புதுச்சேரியில் அமைய வேண்டும்" என்று சிவா குறிப்பிட்டார்.