ஸ்டாலின் கையில் வேல் எடுத்ததே உங்களை சூரசம்ஹாரம் செய்யத்தான்.. அதிமுகவை அலற விடும் துரைமுருகன்..!
திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை. மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான்.
இப்போதாவது, தனித்துப் பிரச்சாரம் செய்வதாக முடிவெடுத்ததற்கு காங்கிரசுக்கு பாராட்டு என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
திருத்தணியில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, வெள்ளி வேல் ஒன்றை திமுகவினர் பரிசாக அளித்தனர். வெள்ளி வேலை கையில் வைத்தபடி மு.க.ஸ்டாலின் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. பதவிக்காக பகுத்தறிவை பறக்கவிட்டு விட்டார் ஸ்டாலின் என பெரும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஸ்டாலினையே வேல் தூக்க வைத்தது தான் பாஜக நடத்திய வேல் யாத்திரையின் வெற்றி. முருகனின் வேலை ஸ்டாலின் ஏந்தியுள்ளார். மிக விரைவில் முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும் என எல்.முருகன் விமர்சனம் செய்திருந்தார். மேலும், தேர்தலுக்காக மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் கூறியிருந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரைமுருகன்;- திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை. மு.க.ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசம்ஹாரம் செய்யத்தான். இப்போதாவது தனித்து பிரச்சாரம் செய்வதாக முடிவெடுத்ததற்காக, காங்கிரசுக்கு பாராட்டுக்கள் என்று தெரிவித்துள்ளார்.