வாயை விட்டு வாங்கி கட்டும் அமைச்சர் - சிபிஐ விசாரணை கோரும் செயல்தலைவர்...
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் பொழுது, இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் இலாகாவை ஒதுக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்கிய கடிதத்திலும் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது குறித்து சி.பி.ஐ விசாரணை தேவை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மூன்று தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது.
அதாவது அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜியும், தஞ்சாவூரில் எம்.ரெங்கசாமியும், திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸ்சும் வெற்றி பெற்றனர். இதையடுத்து அதிமுகவின் பலம் 136 ஆக கூடியது.
இந்த இடைத்தேர்தலின் போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது இடைத்தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டதாக கூறப்ப்ட்டது. மேலும் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கவும் கைரேகை பெறப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் இன்று பேசிய திண்டுக்கல் சீனிவாசன் நாங்கள் யாரும் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்கவே இல்லை என கூறி குண்டை தூக்கி போட்டுள்ளார். மேலும் நாங்கள் பொய் கூறியதாகவும் எங்களை மன்னிக்கவும் கைகூப்பி கேட்டு கொண்டார்.
இந்நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் பொழுது, இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் இலாகாவை ஒதுக்க ஆளுநருக்கு அறிவுரை வழங்கிய கடிதத்திலும் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது குறித்து சி.பி.ஐ விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளார்.