மாறும் வரலாறு! கலைஞருக்காக பூஜை செய்த உடன்பிறப்புக்கள்... மனமுருகி வேண்டுதல் அபிஷேகம்!
பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, ஆகிய கோஷங்களை முன்வைத்தே ஆட்சியை பிடித்த கட்சி திமுக , அதன் அசைக்க முடியாத தலைவராக 5௦ ஆண்டு கால ராஜாதி ராஜானாக இருப்பவர் நலம்பெறவேண்டி பூஜையும் அபிஷேகமும் நடைபெறுகிறது .
ராஜாஜி, காமராஜ் போன்ற அசைக்க முடியாத காங்கிரஸ் தலைவர்களின் செல்வாக்கிலிருந்து விடுபட வைத்ததே பகுத்தறிவு எனும் வாதம் தான். இந்த வாதத்தை முன் வைத்தே பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் அசைக்க முடியாத மக்கள் தலைவராகினார்.
கருணாநிதியும் தற்போது வரை அந்த கொள்கையில் விடாபிடியாக இருந்து வருகிறார். ஆனால் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் களேபரங்களால் கலவரமாகிப்போன திமுக உடன் பிறப்புகள், தமிழகத்தின் பல பகுதிகளில் கோவில் படி ஏறி வருகின்றனர்.
பூஜை, புனஷ்காரம், அபிஷேகம், தங்கள் தலைவர் நலம்பெற வேண்டி மனமுருகி நெக்குருகி வேண்டிக்கொள்கின்றனர். பூசாரி பூசாரிகளை வைத்து பூஜை செய்து வருகின்றனர். திருவாரூர், நெல்லை, ஈரோடு, சேலம் மற்றும் வேலூர் போன்ற பகுதிகளில் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.
தொண்டர்களின் ஆதங்கம் ஒருபக்கம் இருக்க, மீண்டும் நலம்பெற்று வந்து தொண்டர்முன் கை அசைக்கும் போது கருணாநிதி இதை ஆதரிப்பாரா? என்பது கேள்விக்குறி, காரணம் முன்னாள் எம்.பி சங்கராபுரம் ஆதிசங்கர் நெற்றியில் வைத்திருந்த குங்குமம் வேர்வையில் நனைந்து வழிந்தோடியபோது நெற்றியில் ரத்தம் சொட்டுகிறது என சொன்னவர் கருணாநிதி, அதன்பின் வந்த விமர்சனங்கள் பற்றி கவலைப்படவில்லை, இப்படி கடவுள் மறுப்பு விஷயத்தில், கருணாநிதியின் தொண்டர்கள் சிலர் அவருக்காக பூஜா புனஷ்காரம் செய்வதை பார்க்கும் போது, வரலாறு மாறுகிறது என சொல்லாமல் வேறு என்ன சொல்வது?.