மழை... மோடி... கோபாலபுரம்... மத்திய அரசுக்கு எதிரான நவ.8 திமுக., கண்டன ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ரத்து!
2016 நவ.8ம் தேதியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அன்றுதான், டிமானிடைசேஷன் என, ரூ.500 ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என மோடி அறிவித்தார். இப்படி, ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டதால், பொதுமக்களிடம் பெரும் எதிர்ப்பு காணப்பட்டது. ஆனாலும், மக்கள் அதிகம் பேர், இது ஊழலுக்கு எதிரான நடவடிக்கை என்று அதனை ஏற்று, ஏடிஎம் வாசல்களில் கால்கடுக்க வரிசையில் நின்று கிடைத்த ரூ.2000 புது நோட்டை எடுத்துக் கொண்டு புலம்பியபடி சென்றனர்.
இப்படி, பொதுமக்களை மிகவும் கஷ்டப்படுத்திய நவ., 8 ஆம் தேதியை கறுப்பு நாளாக அனுசரிக்கப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. காங்கிரஸ் கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், நவ.8 ஆம் தேதியை தாங்களும் கறுப்பு நாளாஅ அனுசரிக்கப் போவதாக திமுக., கூறியிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திமுக., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை கோபாலபுரத்துக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி. கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினருடன் சற்று நேரம் பேசி மகிழ்ந்த பின், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருடன் பேசினார்.
மோடியின் இந்த வருகை தமிழக அரசியலில் திடீர் திருப்பமாகப் பார்க்கப்பட்டது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருவதை அடுத்து, 8 மாவட்டங்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக., கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த 8 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில், நாளை மறுநால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.