DMK betrayed like this in Cauvery issue H.Raja accused
நாகப்பட்டினம்
காவிரி பிரச்சனையில் விவசாயிகளுக்கு துரோகம் தி.மு.க. இப்படியெல்லாம் துரோகம் செய்தது என்று அடுக்கடுக்காக கூறுகிறார் எச்.ராஜா.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் பா.ஜ.க சார்பில் விவசாயிகளின் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் அமிர்த விஜயக்குமார், நாஞ்சில் பாலு, செயலாளர்கள் உமாமகேஸ்வரி, முத்துசாமி, கொள்ளிடம் ஒன்றிய தலைவர் நேதாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராமசெந்தில்குமார் வரவேற்றார்.
இதில், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், துணை தலைவர் நாகராஜன், பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் அகோரம், தஞ்சை கோட்ட பொறுப்பாளர் தங்கவரதராஜன் ஆகியோர் பேசினர்.
இந்த்க கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்று பேசியது: "கடந்த 50 ஆண்டுகளாக காவிரி டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்த தி.மு.க.வின் துரோகத்திற்கு முடிவு கொண்டுவந்து, தற்போது காவிரி பிரச்சனையில் விவசாயிகளுக்கு நியாயம் வழங்கி உள்ள பிரதமர் நரேந்திரமோடி அரசுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமாகதான் இதை பார்க்கிறோம்.
கடந்த 1924-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கும், மைசூர் மாநிலத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரதான அம்சம் என்னவென்றால், கர்நாடகத்தில் அணை கட்டுவதாக இருந்தால் தமிழகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். அதேபோல தமிழகத்தில் அணை கட்ட வேண்டும் என்றால் கர்நாடகாவிடம் ஒப்புதல் பெற வேண்டும். தமிழகத்தில் இதுவரை ஒரு அணையும் கட்டப்படவில்லை.
ஆனால், கர்நாடகா ஹேமாவதி, ஹேரங்கி, கபினி ஆகிய அணைகளை கட்டியது. இது தொடர்பாக 1970-ஆம் ஆண்டு சட்டசபையில் கருணாநிதி பேசியபோது கர்நாடகா அரசு அவர்கள் தேவைக்கு அணைகளை கட்டி கொள்கிறார்கள். இதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று பேசினார். இதனை யாரும் மறுக்க முடியாது.
தமிழகத்தில் டெல்டா விவசாயிகளுக்கு முதல் துரோகம் செய்தது தி.மு.க., அதற்கு துணை போனது காங்கிரஸ் கட்சி.
அதேபோல் 1974-ஆம் ஆண்டு காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விவசாயிகளுக்கு துரோகம் செய்ததும் தி.மு.க. தான். உச்ச நீதிமன்றத்தில் காவிரியில் தமிழகத்தின் உரிமையை பெறுவதற்கு தமிழக அரசு தொடுத்த வழக்கையும் வாபஸ் வாங்கியது கருணாநிதிதான்.
இப்படி காவிரி பிரச்சனையில் விவசாயிகளுக்கு துரோகம் செய்த தி.மு.க. இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது.
கர்நாடகாவில் ஒரு நாள் முதலமைச்சராக எடியூரப்பா இருந்த காரணத்தால்தான் உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஜி.எஸ்.டி. வரியால் எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறைந்துள்ளது" என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில இளைஞர் அணி செயலாளர் சரண்ராஜ், வக்கீல்கள் பிரிவு செயலாளர் வக்கீல் கணேசமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் குருமூர்த்தி, அருணாச்சலம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் முடிவில் சீர்காழி நகர தலைவர் செல்வம் நன்றி தெரிவித்தார்.
