இனி வரும் தேர்தலில் தேமுதிக எழுச்சி பெறும்.. உள்ளாட்சித் தேர்தலில் பலத்தை காட்டுவோம்.. விஜயகாந்த் அதிரடி.!
அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மீண்டும் எழுச்சி பெறும் என்று தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு சவால்களை தாண்டி நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி தொடங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து 14.09.2021 அன்று 17-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் - பகுதி - வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் உங்கள் பகுதியிலேயே கழக கொடியை ஏற்றி, இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே' என்கிற கொள்கையின் அடிப்படையில் ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து கழக துவக்க நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
தோல்வி என்பது சறுக்கல்தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம். அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மீண்டும் எழுச்சி பெறும். மக்களுக்காக நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம். எனவே, நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்று உறுதியோடு நாம் அனைவரும் பயணிப்போம்.” என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.