டிடிவி தினகரனுக்கு வாழ்த்து சொன்ன பிரேமலதா? மீண்டும் அமமுகவுடன் தேமுதிக ரகசிய பேச்சுவார்த்தை..!
அமமுகவுடன் தேமுதிக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், நாளை கூட்டணி உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அமமுகவுடன் தேமுதிக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், நாளை கூட்டணி உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக - தேமுதிக கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் தாங்கள் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வராததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார் விஜயகாந்த். மேலும் அதிமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் பொன்ராஜ் வேண்டுகோள் விடுத்தார். இதனை தேமுதிகவினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அமமுக கூடன் தேமுதிக திரைமறைவு கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகின. எனினும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற தகவலும் வெளியாகின. இதனையடுத்து, நேற்று மாலை திடீரென 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை தினகரன் வெளியிட்டு தேமுதிகவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதுவரை அமமுகவில் 195 வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். கூட்டணிக்கு ஒதுக்கியது போக இன்னும் சில தொகுதிகள் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு அமமுக நிர்வாகிகள் தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா தொலைபேசி வாயிலாக டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக அமமுக உடன் நாளை கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.