போதும்டா சாமி நீங்களும் உங்க கட்சியும்.. தேமுதிகவில் இருந்து வெளியேறபோகும் மாசெக்கள்.. விஜயகாந்த் அவசர அறிக்கை
இதுபோன்ற நேரத்தில் கழக நிர்வாகிகள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம். மேலும் சமூக தளங்களில் தவறான செய்தி பரப்புவது, தலைமைக்கு களங்க விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் அனைவரும் ஒற்றிணைந்து தேமுதிகவின் கழகத்தின் வளர்ச்சிக்காக ஈடுபட வேண்டும்.
இனி வரும் காலங்களில் தேமுதிகவை எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தேர்தல் முடிந்தவுடன் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் தலைமை கழகத்தில் நடத்துவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு உடனடியாக அமலுக்கு வந்ததாலும், கொரோனா பரவல் காரணமாகவும், ஒரே இடத்தில் அனைவரும் கூட்டம் சேர்க்கக் கூடாது என்பதற்காகவும் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியவில்லை. வெகு விரைவில் ஊரடங்கு காலம் முடிந்தவுடன் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம்.
இதில் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பகிரந்து கொள்ளலாம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் தான். தேர்தலுக்கு முன்பு யாருடன் கூட்டணி வைப்பது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்திய பிறகே முடிவெடுக்கிறோம். அதேபோல் தேர்தல் முடிந்த இந்த நேரத்திலும் மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்து, இனி வரும் காலங்களில் தேமுதிகவை எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மேலும் தேமுதிகவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
இதுபோன்ற நேரத்தில் கழக நிர்வாகிகள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம். மேலும் சமூக தளங்களில் தவறான செய்தி பரப்புவது, தலைமைக்கு களங்க விளைவித்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் அனைவரும் ஒற்றிணைந்து தேமுதிகவின் கழகத்தின் வளர்ச்சிக்காக ஈடுபட வேண்டும். ஊரடங்கு முடிந்தவுடனோ அல்லது அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றோ மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வெகுவிரைவில் நடத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எனவே நிர்வாகிகள் உறுதியோடு இருந்து வளர்ச்சியை நோக்கி பயணிப்போம் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதனிடையே, தேமுதிகவில் இருந்தால் தங்கள் எதிர்காலம் சரியாக இருக்காது எனக் கருதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதால் அவசர அவசரமாக விஜயகாந்த் இந்த அறிக்கை வெளியிட்டதாக கூறப்படுகிறது.