கைகூப்பி வணங்கிய கேப்டன்... விண்ணைப் பிளந்த விஜயகாந்த் தொண்டர்களின் ஆராவாரம்...!
சேத்துப்பட்டியில் பிரச்சார வாகனத்தில் நின்றபடியே இருகரங்களையும் கூப்பி தொண்டர்களை நோக்கி விஜயகாந்த் வணக்கம் தெரிவிக்க, தொண்டர்களின் கூச்சலும், ஆராவாரமும் விண்ணைப் பிளந்தது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. உடல் நலக்குறைவு காரணமாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடவில்லை. இதேபோல அவருடைய மகன் விஜய பிரபாகரன், கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோரும் போட்டியிடவில்லை. விஜயகாந்தின் மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே, அந்தத் தொகுதியிலேயே பெரும்பாலும் பிரேமலதா பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
எல்.கே. சுதிஷுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரேலமதாவுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. எனவே, தேமுதிக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர்கள் பிரசாரம் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் இறுதிகட்டத்தில் பிரசாரம் செய்வார் என்று பிரேமலதா ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் தனக்கு சென்டிமெண்ட் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து நேற்று விஜயகாந்த் பிரசாரத்தைத் தொடங்கினார். கும்மிடிப்பூண்டி தேமுதிக வேட்பாளர் டில்லியை ஆதரித்து பஜார் சாலையில் பிரச்சார வேனில் நின்ற படி வாக்கு சேகரித்தார்.
கூட்டத்தினரை நோக்கி ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் நின்றிருந்த விஜயகாந்தின் நிலை தேமுதிக தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் கேப்டன் முகத்தையாவது பார்க்க வேண்டும் என ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். தற்போது அதன் தொடர்ச்சியாக சென்னை எழும்பூர் தொகுதியில் வேட்பாளர் பிரபுவை ஆதரித்து இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சேத்துப்பட்டியில் பிரச்சார வாகனத்தில் நின்றபடியே இருகரங்களையும் கூப்பி தொண்டர்களை நோக்கி விஜயகாந்த் வணக்கம் தெரிவிக்க, தொண்டர்களின் கூச்சலும், ஆராவாரமும் விண்ணைப் பிளந்தது. தொடர்ந்து திருவிக நகர் வேட்பாளர் எம்.பி.சேகர், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் சுபமங்களம் டில்லிபாபு ஆகியோரை ஆதரித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.