காலியாகும் கேப்டன் கூடாரம்..! இவரும் கெளம்புறாரா..? வேதனையில் பிரேமலதா
நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வரும் அக்கட்சியில் இப்போது கொஞ்சூண்டு நிர்வாகிகள்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்
தூக்கி அடிச்சுடுவேன்! என்று விஜயகாந்த கர்ஜித்த காலத்து தே.மு.தி.க. உங்களுக்கு நினைவிருக்கிறதா? உண்மையாகவே தெறிக்க விட்டுக் கொண்டிருந்தார்கள் தமிழக அரசியலை. கேப்டன் எனும் ஒற்றைச் சொல் மந்திரத்தால் தமிழக அரசியலே அல்லோகல்லப்பட்டு கிடந்தது. அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க மெகா கட்சிகளே வாலண்டியராக வந்து வாசலில் நின்றார்கள்.
கேப்டன் கட்சியின் கிளை செயலாளர் பதவிக்கு கூட அவ்வளவு அடிதடியாக இருக்கும். மாவட்ட செயலாளர் பதவிகளெல்லாம் யோசிக்கவே பெரும் கஷ்டம்தான். அவ்வளவு போட்டிகள், கட்டுப்பாடுகளோடு இருந்தது அக்கட்சி. ஆனால் விஜயகாந்தின் உடல் நிலை தளர்ந்த கையோடு அத்தனையும் கதம் கதம் என்றானது. இன்றோ அக்கட்சியின் நிலை தலைகீழாக இருக்கிறது. மாநில பதவியை கூட கூப்பிட்டு கொடுத்தாலும் ‘எங்க பக்கத்து வீட்டுக்காரர் சும்மாதான் இருக்கார். அவர்ட்ட கொடுத்துடுங்களேன்’ என்று நிர்வாகிகள் தெறித்து ஓடுகின்றன. பின்னே! பொறுப்பில் உட்கார்ந்தால் யார் செலவு செய்வது!? என்பதே அவர்களின் கேள்வி.
நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வரும் அக்கட்சியில் இப்போது கொஞ்சூண்டு நிர்வாகிகள்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் கேப்டனின் முகத்துக்காகவும், அவரால் வாழ்க்கை பெற்ற விஸ்வாசத்துக்காவும் தான்.
அவர்களில் ஒருவர்தான் அக்கட்சியின் கலைப்பிரிவு செயலாளராக இருக்கும் ராஜேந்திரநாத். நடிகரான அவர் விஜயகாந்த் நடித்த படங்கள் உள்ளிட்ட பல படங்களில் போலீஸ் அதிகாரியாக வரும் பல்க்கான, பெரிய மீசை மனிதர். அவருக்கு அரசியலில் அரிச்சுவடி கத்துக் கொடுத்தது கேப்டன் தான். அதற்காகத்தான் இவ்வளவு இக்கட்டிலும் அக்கட்சியில் ஒட்டி இருந்தார்.
ஆனால், இப்போது தலைக்கு மேல் வெள்ளம் போன நிலையில் அக்கட்சியில் இருந்து வெளியேற முடிவு பண்ணிவிட்டாராம். அவருக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் நல்ல நட்பு இருக்கிறது. அமைச்சரிடம், தி.மு.க.வில் தான் இணைய விரும்புவதை நடிகர் சொன்னதும், ‘உள்ளாட்சி தேர்தலுக்கு அப்புறமா வாங்க. வரும்போது அங்கே இருக்கிற மிச்சம் சொச்சம் தலைகளையும் கூட்டிட்டு வந்துடுங்க.’ என்று உத்தரவிட்டுள்ளாராம். குஷியான ராஜேந்திர நாத் தே.மு.தி.க.வில் இருக்கும் நிர்வாகிகளிடம் இது குறித்து பேசிக் கொண்டிருக்கிறாராம்.
இந்த விவகாரம் பிரேமலதாவின் காதுகளுக்குப் போக, அவர் கூப்பிட்டு நடிகரை விசாரிக்க, ‘அண்ணி அதெல்லாம் வதந்தியான தகவல். நான் கேப்டனை விட்டு போவேனா?’ என்கிறாராம். ஆனாலும் கிளம்ப தயாராகிவிட்டார். இது பிரேமலதாவுக்கும் புரிந்துவிட்டது.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிறு நிர்வாகிகள் ‘இவரும் கெளம்புறாரா? போறப்ப இருக்கிற பத்து பேரையும் கூட்டிட்டு போயிட்டார்னா கேப்டன் கூடாரமே காலியாகிடுமே. அந்த ஆலமரம் தனியா நின்னுடுமேய்யா’ என்று கண் கலங்குகிறார்கள்.
பாவம் அந்த வள்ளல் மனிதர்!