dmdk candidate waiting for premalatha for campaign
ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடை தேர்தல், வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுகவின் 3 அணிகள், தேமுதிக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 62 பேர் போட்டியிடுகின்றனர்.
திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என ஏராளமானோர் பிரசாரம் செய்கின்றனர்.
அதேபோல், அதிமுக ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்தும், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் வாக்கு சேகரிக்கின்றனர். சசிகலா அணி வேட்பாளர் தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் களம் இறங்கியுள்ளனர்.

இதையொட்டி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், இன்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இவர்களுக்கு இணையாக, இசையமைப்பாளர் கங்கைஅமரன், பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பாஜகவின் மூத்த தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிடும் மதிவாணன், தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால், அவருக்கு தொண்டர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளது. இதனால், பிரச்சாரத்துக்கு மூத்த நிர்வாகிகள் வருவார்களா என எதிர் பார்த்து காத்திருக்கிறார்.
ஆர்கே நகர் தேர்தல் பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வருவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு ஓய்வு தேவை என டாக்டர்கள் கூறியதால், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால், தேமுதிக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கவோ, பிரச்சாரத்தில் ஈடுபடவோ அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரும் முன் வரவில்லை. விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. அதிலும் அவர் எப்போது, வருவார் என அதிகாரப்பூர்வமாக தெரியாமல் உள்ளது.
இதனால், ஆர்கே நகர் தொகுதி தேர்தலில் டெபாசிட் தொகையாவது கிடைப்பதற்கு வாக்கு சேகரிக்க வேண்டும் என வேட்பாளர் புலம்பி வருகிறார். இதையொட்டி, தினக்கு பிரச்சாரம் செய்ய தேமுதிக நிர்வாகிகள் எப்போது வருவார்கள் என வழி மீது விழி வைத்து காத்திருக்கிறார் மதிவாணன்.
