தலை சுத்துது, மயக்கம் வருது... இயேசுவை போல தொகுதியை சுமக்கிறேன்... மருகி உருக வைக்கும் விஜயபாஸ்கர்..!
இயேசு நாதர் சிலுவையைச் சுமந்ததைப் போல, விராலிமலை தொகுதியை நான் சுமந்து கொண்டிருக்கிறேன். என் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். தன்னுடைய மகள் அனன்யாவை பிரசாரத்தில் களமிறக்கியுள்ள விஜயபாஸ்கர், வாக்காளர்களிடம் உருக்கமாகப் பேசி வாக்கு சேகரித்து வருகிறார். அப்படி அவர் உருக்கமாக வாக்கு சேகரித்து வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் விஜயபாஸ்கர் பேசுகையில், “எனக்கும் சர்க்கரை இருக்கிறது, ரத்தக்கொதிப்பு இருக்கிறது. இதற்காக மருந்து, மாத்திரை சாப்பிடுகிறேன். நேரம், காலம் பார்த்து சரியாகச் சாப்பிட்டுவிட்டு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
மதியம் ஒரு மணி நேரம் தூங்கி ஓய்வெடுக்கலாம். இரவு 10 மணிக்கெல்லாம் உறங்கி, அதிகாலை 5 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சிக்குச் சென்று உடம்பைக் கவனித்துக் கொள்ளலாம். எனக்கும் தலைசுற்றல், மயக்கம் என பிரச்னைகள் உள்ளன. ஆனால், மனதில் வெறி இருக்கிறது. எடுத்துக்கொண்ட பொறுப்பை ஒழுங்காக செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இயேசு நாதர் சிலுவையைச் சுமந்ததைப் போல, விராலிமலை தொகுதியை நான் சுமந்து கொண்டிருக்கிறேன். என் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.