கட்டித்தழுவி கொண்ட தினகரன் திவாகரன்... 'நீர் அடித்து நீர் விலகாது' என பேட்டி!!
டிடிவி தினகரனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், நீர் அடித்து நீர் விலகாது எனவும், திவாகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாநில செயலாளராக டாக்டர் வெங்கடேஷ் இருந்து வந்தார். பின்னர், அவர் தனது கட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தார். இவரது தாய் சந்தானலட்சுமி.
அதிமுக பொது செயலாளர் சசிகலாவின் அண்ணியும், துணை பொது செயலாளர் டிடிவி.தினகரனின் மாமியாருமான சந்தான லட்சுமி கடந்த சில நாட்களாக இருதய நோய் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை மருத்துவமனையில் சந்தானலட்சுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைதொடர்ந்து அவரது உடல் மக்கள் பார்வைக்காக தஞ்சாவூரில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக டிடிவி தினகரன் தஞ்சை சென்றார். அங்கு திவாகரனை கட்டி தழுவி ஆறுதல் கூறினார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திவாகரன், டிடிவி தினகரனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், நீர் அடித்து நீர் விலகுவதில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், சக்ர வியூகத்திலிருந்து விரைவில் மிட்டெழுவோம் எனவும், முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான ஆட்சி நல்லபடியாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.