திமுகவோடு மதிமுக இணைப்பா? மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு
திமுகவோடு மதிமுகவை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தலைமை நிலைய செயலராக துரை வைகோ
1990களில் திமுகவில் முக்கிய நபராக இருந்தவர் வைகோ, இலங்கைக்கு சென்று வந்த காரணத்தால் கட்சியில் இருந்து 1993 ஆம் ஆண்டு வைகோ நீக்கப்பட்டார். இதனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அரசியல் அமைப்பை 1994 ஆம் ஆண்டு வைகோ உருவாக்கினார். தேர்தல்களில் வெற்றி, தோல்வி என மாறி மாறி கிடைத்ததாலும் வைகோவின் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவாலும் தொண்டர்கள் கடும் விரக்தி அடைந்து தாய் கழகமான திமுகவில் சென்று இணைந்தனர். இந்தநிலையில் வைகோவின் வயது முதிர்வு காரணமாக அடுத்த தலைமை யார் என்ற கேள்வி மதிமுகவில் ஏற்பட்டது. இதனையடுத்து மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரிக்கு தலைமை பொறுப்பு வழங்கலாமா? அல்லது வேண்டாமா? என வாக்குகெடுப்பு நடத்தினர் இதில் பெரும்பாலான தலைவர்களின் முடிவுக்கு ஏற்ப துரை வைகோவை மதிமுகவில் தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மதிமுக பொதுக்குழு தீர்மானம்
இதனையடுத்து மதிமுகவில் தலைமை பொறுப்பில் துரை வைகோ நியமிக்கப்பட்டதற்கு ஒரு,சில மூத்த தலைவர்கள் கடும் எதிப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் வைகோ வாரிசு அரசியலுக்கு எதிராக மதிமுக கட்சியை ஆரம்பித்து விட்டு தனது வாரிசை பதவியில் அமர வைத்துள்ளதாக சிவகங்கை, விருதுநகர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்களும், மதிமுக ஒரு சில மூத்த தலைவர்களும் குற்றம் சாட்டினார். எனவே திமுகவோடு மதிமுகவை இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் மதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ஒருமனதாக தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் இரண்டு துணை செயலாளர் பதவி காலியாக இருந்த நிலையில் அந்த பதவி முருகன் மற்றும் ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. மேலும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 24 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் முக்கிய தீர்மானமாக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மேகதாது பிரச்சனையில் கர்நாடக அரசை கண்டித்தும், திமுக அரசின் செயல்பாட்டை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒழங்கு நடவடிக்கை எடுக்க வைகோவிற்கு அதிகாரம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவிற்கு பதவி வழங்க கூடாது என ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி மற்றும் துரை வைகோவிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு சில மாவட்ட செயலாளர்களும் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி திமுகவோடு மதிமுகவை இணைக்க வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு கருத்து தெரிவித்த மதிமுக மாவட்ட செயலாளர்கள் மீது வைகோ நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.