"அவசரமாக வந்திருக்கும்... அதனால் வெளியேறி இருப்பார்கள்...!" - கூட்டணி கட்சிகள் பற்றி திண்டுக்கல் சீனிவாசன் கிண்டல்...
சட்டமன்றத்தில் மாட்டிறைச்சி விவகாரம் நேற்று எதிரொலித்தது. இதில், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவருக்கு ஆதரவாக, அதிமுகவின் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இது பற்றி, மதுரையில் பேட்டியளித்த திண்டுக்கல் சீனிவாசன், அவர்களுக்கு அவசரமாக வந்திருக்கும்... அதனால் வெளிநடப்பு செய்திருப்பார்கள் என்று கிண்டலாக தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று, மாட்டிறைச்சி விவகாரம், பெரிதாக எதிரொலித்தது. எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் கொண்டு வந்த தனிநபர் தீர்மானத்தின் மீது பதில் அளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மழுப்பலாக பதிலளித்தார்.
விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன், மக்களின் கருத்தை அறிந்த பிறகு இதுபற்றி முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய மு.க.ஸ்டாலின், கோவா போன்று எதிர்ப்பையாவது பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார். ஆனாலும், இதற்கு பதிலளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்த காரணத்தால், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்த விவகாரத்தில் அதிமுகவின் தோழமை கட்சிகளும், இரட்டை இலை சின்னத்தில் நின்று ஜெயித்த தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு உள்ளிட்டோரும் திமுகவுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தன.
இது பற்றி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு துவக்க விழாவில் கலந்து கொள்ள மதுரை வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள், கூட்டணி கட்சிகளே திமுகவுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தனவே என்று கேட்டபோது, அதெல்லாம் ஒன்னுமில்ல தம்பி... அவங்களுக்கு அவசரமா வந்திருக்கும். அதனால வெளிய போயிட்டிருப்பாங்க என்று கிண்டலாக தெரிவித்தார்.
பின்னர் சீரியஸாச, அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை பத்திரிக்கைகள் தான் அப்படி போடுகின்றன என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக பதிலளித்தார்.