தினகரனின் மனைவிதான் அ.ம.மு.க.வை நடத்துகிறார்: புது டிஸைனில் ஆம்லெட் போடும் திவாகரன்
அ.தி.மு.க, அ.ம.மு.க. என்று ஆளாளுக்கு அவங்கவங்க பொழப்பை ஓட்டிக் கொண்டிருந்த நிலையில் திடீரென வாலண்டியராக சண்டையை இழுத்து தினகரனை தெருவில் இழுத்துவிட்டிருக்கிறார் திவாகரன்.
இந்நிலையில் ஏன் இந்த பிரச்னை? எதுக்கு இப்டி குதிக்கிறீங்க? என்று அவரிடம் கேட்டதற்கு புது டிஸைனில் பதில்களை தட்டிவிட்டிருப்பவர்...
“என் பையன் ஜெய் ஆனந்த் போடுற பேஸ்புக் பதிவுகளால்தான் பிரச்னைகள் உருவாகிடுச்சுன்னு சொல்றாங்க. அதை ஏத்துக்க முடியாது. தினகரன் கட்சியின் வெற்றிவேல் வரம்பு மீறி நடக்கிறார். அவரை அவங்களால் தடுக்க முடியாத போது ஜெய் ஆனந்தையும் என்னால் தடுக்க முடியாது.
ஒரு விஷயம் தெரியுமா? ஜெய் ஆனந்த் எழுதிய முகநூல் பதிவுக்கு, வெற்றிவேல் எழுதிய பதிலை எழுதிக் கொடுத்ததே தினகரனின் மனைவி அனுராதாதான். அந்த பெண் எழுதுவதுதான் வெற்றிவேல் மூலம் வெளியாகிறது. தினகரனின் மனைவிதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். தினகரன் வெறும் பொம்மையே!
சரி, திடீரென தினகரனின் மனைவி அரசியலுக்குள் வர காரணம் என்ன? என்று மக்கள் கேட்கலாம். அதற்கும் பதில் சொல்கிறேன். அதாவது அந்த பொண்ணு எங்கேயோ போயி ஜோசியம் பார்த்திருக்கிறார். அந்த ஜோசியக்காரரும், ‘உங்க புருஷன் முதலமைச்சர் ஆகிடுவார்’ அப்படின்னு சொல்லியிருக்கார். இதை நம்பி, அரசியல்ல சைலண்டா இறங்கிடுச்சு. தினகரன் முதல்வர் ஆவதற்கு போட்டியாக இருக்கும் ஒரே நபர் நான் தான். அதனால என்னை வேரறுக்க நினைக்கிறாங்க. அதனாலதான் இந்த பாய்ச்சல்களெல்லாம். இப்பவும் சொல்றேன் நான் தனியாள் இல்லை.
நான் தினகரனை கூட மன்னிச்சுடுவேன். ஆனால் இந்த வெற்றிவேலோட ஆட்டம்தான் பெருசு. அவரோட பேட்டி வந்த பிறகுதான் அவ்வளவு பிரச்னைகளும் தலை தூக்கியிருக்குது. பார்க்கலாம் இன்னும் என்னென்ன நடக்குதுன்னு.” என்று சிரிக்காமல் சிக்ஸரடித்திருக்கிறார்.