Dinakaran who walked out of the assembly refused to speak in the and began to read RK Nagars demands.

சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்த டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் கோரிக்கைகளை வரிசையாக வாசிக்க தொடங்கினார். 

தமிழக சட்டப்பேரவை கடந்த 8 ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியது. 

இதில் கேள்விபதில் நேரங்களில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அதற்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். 

ஆர்.கே.நகரில் சுயேட்சையாக தேர்தலில் நின்று வெற்றி பெற்ற டிடிவி தினகரனும் இந்த பேரவையில் கலந்து கொண்டு கேள்வி எழுப்பி வருகிறார். 

இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக டிடிவி தினகரனுக்கும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று மீண்டும் அவை தொடங்கியது. அப்போது தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேச அனுமதி தராததால் ஆர்கே நகர் எம்எல்ஏ தினகரன் வெளிநடப்பு செய்தார். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவையில் பேச வாய்ப்பு தரவில்லை என்றும் ஆர்கே நகர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை பேச இருந்ததாகவும் தெரிவித்தார். 

மேலும் அந்த கோரிக்கைகள் என்னவென்று வரிசையாக வாசித்தார். அதாவது, 

1. ஆர்.கே.நகரில் சொந்த வீடு இல்லாத 57 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். 
2. கைலாச முதலி தெருவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டித்தரப்பட வேண்டும். 
3. தண்டையார் பேட்டையில் மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைத்து தர வேண்டும். 
4. ஸ்டான்லி மருத்துவமனை நவீன படுத்தப்பட வேண்டும். 
5.10 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்க வேண்டும். 
6. உலகதரம் வாய்ந்த உடற்பயிற்சி கூடம். 
7. நவீன குப்பை சேகரிக்கும் மையம்.
8. ஐஓசி பேருந்து நிறுத்தத்தை பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும். 
9. 10 ஏக்கர் நிலப்பரப்பில் மயான பூமி
10. பாதாள சாக்கடை இணைப்பு 
11. மீன் மார்க்கெட்டை நவீன வசதி செய்ய வேண்டும்.
12. மீன் அங்காடி அமைத்திட வேண்டும். 
13. பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
14. கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் புதிய சுரங்கப்பாதை
15. முதியோர் மற்றும் விதவை பெண்களுக்கு முறையாக பென்ஷன் வழங்க வேண்டும். 

இவை அனைத்தும் ஏற்கனவே நானும் எடப்பாடியும் ஆர்.கே.நகர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிதான் எனவும் இவற்றை செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார் டிடிவி.